மழை ஒருபக்கம்.. தேமுதிக ஆலோசனை மறுபக்கம்.. விஜயகாந்த் பிஸியோ பிஸி!
சென்னை: வட கிழக்குப் பருவ மழை ஒருபக்கம் பிசியாக இருக்க, மறுபக்கம் விஜயகாந்த் அதை விட பிசியாக இருக்கிறார்.
தனது கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் விடாமல் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் அவர் சென்னையில் ஆலோசனையில் ஈடுபட்டார்.
மாவட்டச் செயலாளர்கள் மட்டுமல்லாமல் கட்சியின் நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார் விஜயகாந்த்.
உடல் நலம் தேறி
லோக்சபா தேர்தல் சமயத்தில் விஜயகாந்த்துக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தலுக்குப் பின்னர் வெளிநாடு போய் சிகிச்சை பெற்று திரும்பினார்.
ஜெ. கைதுக்குப் பின் சுறுசுறுப்பு
அதன் பின்னர் வீட்டோடு இருந்து வந்தார் விஜயகாந்த். லோக்சபா தேர்தலில் அவரது கட்சி படு தோல்வியைச் சந்தித்ததால் சோர்ந்து போயிருந்தார். இந்த நிலையில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி சிறைக்குப் போனதும் சுறுசுறுப்பாகி விட்டார்.
தினசரி அறிக்கை
ஜெயலலிதா சிறையில் இருந்தபோது தினசரி சூடான அறிக்கையை விட்டு வந்தார்.
ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்துப் பேச்சு
மேலும் பக்ரீத் பண்டிகை சமயத்தில் தனது கட்சியினரிடையே அவர் பேசுகையில் அதிமுகவினரையும், ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்தும் பேசினார். அந்த வீடியோ பரபரப்பையும் ஏற்படுத்தியது.
ஜெ. வந்ததும் கப்சிப்
ஆனால் தீபாவளிக்கு முன்பாக ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்ததும் விஜயகாந்த்தின் சூடு குறைந்துள்ளது. தினசரி அறிக்கைகள் சற்று குறைந்துள்ளன.
கட்சியினருடன் ஆலோசனை
தற்போது அவர் கட்சியினருடன் ஆலோசனையில் குதித்துள்ளார். கடந்த 2 நாட்களாக கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.
இன்றும் ஆலோசனை
இந்த ஆலோசனை இன்று 3வது நாளாக தொடர்ந்தது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், கட்சி வளர்ச்சி குறித்தும் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
வாக்கு வங்கியை டெவலப் செய்வது எப்படி
நமது கட்சியின் வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்த என்ன செய்யலாம் என்பது குறித்து முக்கியமாக அவர் ஆலோசனை நடத்தி வருவதாக சொல்கிறார்கள்.