போய்ப் பாரு, பேசு.. முடிவெடுப்போம்.. பார்த்தசாரதியை திருச்சிக்கு அனுப்பி வைத்த விஜயகாந்த்!
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் என்ன நிலைப்பாட்டை மேற்கொள்ளலாம் என்பது குறித்து திருச்சி மாவட்ட தேமுதிக நிர்வாகிகளுடன், கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆலோசனைப்படி, கலந்து பேசி விட்டு சென்னை திரும்பியுள்ளார் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி.
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் அதிமுக, திமுக வேட்பாளர்களை அறிவித்து விட்டன. பாஜகவும் இத்தேர்தலில் போட்டியிட உள்ளது. காங்கிரஸ் நிலை தெரியவில்லை. மற்ற கட்சிகள் குறித்தும் தெளிவில்லை. தேமுதிக கம்மென்று இருக்கிறது.
தேமுதிகவை பொறுத்த வரை பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தர தயாராக உள்ளதாம். ஆனால், சில பல காரணங்களால் அது இழுத்தடித்து வருகிறதாம். இதனால் பாஜக தனது வேட்பாளரை இறுதி செய்ய முடியாமல் உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் தேமுதிக தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி நேற்று திடீரென திருச்சி வந்தார். விஜயகாந்த் உத்தரவின் பேரில் அவர் திருச்சி வந்ததாக சொல்கிறார்கள். வந்தவர், மாவட்ட தேமுதிக நிர்வாகிகளுடன் இடைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினாராம். அவர்களின் கருத்துக்களைக் கேட்ட பின்னர் அவர் சென்னை திரும்பிச் சென்றார்.
கடந்த 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்ததால் ஸ்ரீரங்கத்தில் தேமுதிக போட்டியிடவில்லை. அதேசமயம், கடந்த 2006 ல் ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதி தேர்தலில் தேமுதிக போட்டியிட்டது. அப்போது 15 ஆயிரம் வாக்குகளை பெற்றது. 2009 நாடாளுமன்ற தேர்தலில் சுமார் 10 ஆயிரம் வாக்குகளையும் பெற்றது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட போது தேமுதிக வேட்பாளர் ஏ.எம்.ஜி. விஜய்குமார் 16 ஆயிரம் வாக்குகளையும் பெற்றார்.
அதாவது 16,000 வரைக்கு மட்டுமே இதுவரை அக்கட்சி வந்துள்ளது. அதற்கு மேல் வாங்கியதில்லை. எனவே தனியாக போட்டியிடுவதா அல்லது பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதா என்பதில் தேமுதிகவுக்கே குழப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. எப்படியும் இன்றைக்குள் தேமுதிக முடிவெடுக்கும் என்று நம்பப்படுகிறது.