தனித்துப் போட்டி.. மீண்டும் பழைய பாதைக்குத் திரும்பிய தேமுதிக
சென்னை: இன்றைக்கு தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறி இருக்கும் கேப்டன் விஜயகாந்த் தனது ரசிகர் மன்றத்துக்கான கருப்பு, சிவப்பு நிறத்தில் மத்தியில் மஞ்சள் நிற தீபம் கொண்ட கொடியை 2002ல் அறிமுகம் செய்தார். பின்னர் அதுவே அரசியல் கட்சியாக மாறியது. அதுதான் இன்றைக்கு தேமுதிக கொடியாகவும் தொடர்கிறது.
தேமுதிக உதயம்:
1996 மற்றும் 2001 உள்ளாட்சித் தேர்தல்களில் விஜயகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர் போட்டியிட்டனர். 500க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றியும் பெற்றனர். இதுவும் கட்சி தொடங்கும் நிலைக்கு விஜயகாந்தை தள்ளியது. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, 2005ம் ஆண்டு ஆகஸ்ட்டில் தேமுதிகவை மதுரையில் முறைப்படி தொடங்கினார். ரசிகர் மன்ற நிர்வாகிகளும், ரசிகர்களும் அரசியலில் காலடி எடுத்து வைத்தனர்.

தனித்து போட்டி:
2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக என்ற இரு பெரும் கட்சிகளை எதிர்த்து தனித்துப் போட்டியிட்ட தேமுதிக, 8 சதவீத வாக்கு வங்கியைப் பெற்றது. விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் எம்எல்ஏ-வாக வெற்றி பெற்று முதன் முறையாக சட்டசபைக்குள் காலடி எடுத்து வைத்தார்.
அதிமுக கூட்டணி:
2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார் விஜயகாந்த். 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளை கைப்பற்றியது தேமுதிக.. விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவராக உருவெடுத்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி:
2014ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக வுடன் கூட்டணி அமைத்த தேமுதிக, போட்டியிட்ட எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. இப்போது சட்டசபை தேர்தலில் அதிமுக தவிர்த்து மற்ற கட்சிகளின் பலத்த எதிர்பார்ப்பாக தேமுதிக மாறியுள்ளது. திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி என பல திசைகளில் இருந்தும் சிவப்புக் கம்பளம் விரித்து காத்திருக்கின்றனர்.
மீண்டும் தனித்து போட்டி:
சென்னையில் இன்று நடைபெற்ற தேமுதிக மகளிரணி மாநாட்டின் இறுதியில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜயகாந்த், சட்டசபை தேர்தலில் தேமுதிக தனித்தே போட்டியிடும் என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
விஜயகாந்தின் முடிவை அனைத்து கட்சிகளும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவரின் இந்த அறிவிப்பு அனைத்து கட்சிகளையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக திமுக, பாஜக, மக்கள் நல கூட்டணியினர் தான் விஜயகாந்த் தங்கள் கூட்டணிக்கு வருவார் என பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் விஜயகாந்தின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications