அராஜகம் பண்ணாதீங்க... மக்கள் நசுக்கிருவாங்க: அதிமுகவினரை எச்சரித்த விஜயகாந்த்
ஈரோடு: பஞ்சபாண்டவர்களாக இருந்த நாங்கள் இப்போது ஆறுமுகமாக மாறியிருக்கிறோம், எங்கள் கூட்டணியில் 6 தலைவர்கள். ஆறுமுகம் நாங்கள். எங்களுக்கு எப்போதும் ஏறுமுகம் தான் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அதிமுகவினர் அராஜகத்தின் உச்சியில் இருக்கிறீர்கள் மக்கள் உங்களை கீழே தள்ளி நசுக்கி உடைத்து விடுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற தேமுதிக -மக்கள் நலக் கூட்டணி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், அதிமுக, திமுக கடந்த 35 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிவிட்டார்கள். 2 கட்சிகளுமே ஊழல் கட்சிகள் தான். அந்த இரண்டு கட்சிகளையும் மக்கள் புறக்கணிப்பார்கள்.

உயிரிழந்தால் நிதி உதவி
கல்வியை வியாபரம் ஆக்கியது யார். ஜெயலலிதாதான். முதல்வர் ஜெயலலிதாவை பொருத்தவரை யாராவது இறந்தால் நிதி உதவி அறிவிப்பார். உயிரின் மதிப்பை, பணம் அறிவித்தால் ஈடாகிவிடும் என ஜெயலலிதா நினைக்கிறார். ஜெயலலிதா கலந்துகொள்ளும் அதிமுக பிரசார கூட்டத்திற்கு காசு கொடுத்து மக்களை அழைத்து வருகிறார்கள்.

அராஜகத்தின் உச்சம்
தான் கலந்துகொள்ளும் பிரசார கூட்டங்களுக்கு ஆடு, மாடுகளை போல் அப்பாவி மக்களை அழைத்து வந்து தண்ணீரின்றி, உணவின்றி அடைத்து வைத்து அராஜகத்தின் உச்சியில் ஜெயலலிதா இருக்கிறார். அதிமுகவினர் அராஜகத்தின் உச்சியில் உள்ளீர்கள். மக்கள் உங்களை கீழே தள்ளி நசுக்கி உடைத்து விடுவார்கள்.

ஆறுமுகக் கூட்டணி
மக்களே நல்லாட்சி வேண்டுமா? கெட்ட ஆட்சி வேண்டுமா? நல்ல ஆட்சி வேண்டுமென்றால் எங்களுக்கு ஓட்டு போடுங்கள்.எங்கள் கூட்டணியில் 6 தலைவர்கள். ஆறுமுகம் நாங்கள். எங்களுக்கு எப்போதும் ஏறுமுகம் தான் என்றார்.

எல்லோரும் நண்பர்கள்
பத்திரிக்கையாளர்களுக்கும், தொலைக்காட்சி நண்பர்களுக்கும் எனக்கும் எந்த சண்டையும் கிடையாது. அனைவரும் எங்களுக்கு நண்பர்கள் தான். சிலர் தூண்டி விடுவதால் தான் பிரச்னை ஏற்படுகிறது. இருந்தாலும் உங்களுக்கும் எனக்கும் எவ்வித சண்டையும் கிடையாது என்றார்.

திடீர் கோபம்
விஜயகாந்த் பேசிக்கொண்டிருந்தபோது, ஈரோடு மஞ்சளுக்கு புகழ் பெற்ற ஊர் என்று பேசினார். இதை கேட்டதும் அங்கு மேடை அருகில் நின்று கொண்டிருந்த தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதனால் கோபமடைந்த விஜயகாந்த் ஆரவாரம் செய்த தொண்டர்களை பார்த்து சத்தம் போடுவதை நிறுத்துகிறீர்களா அல்லது மேடையைவிட்டு கீழே இறங்கி வரவா என்று ஆவேசமாக கேட்டார்.

கூட்டணிக்கட்சி நிர்வாகிக்கும் மிரட்டல்
விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல பொறுப்பாளர் விநாயகமூர்த்தி சால்வை கொடுக்க அருகில் சென்றபோது கோபமடைந்த விஜயகாந்த் நாக்கை துருத்திக் கொண்டு அடிப்பது போல கையை ஓங்கியதால் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போகுமிடம் எங்கும்
விஜயகாந்திற்கு தேர்தல் பிரச்சாரத்தில் அடிக்கடி கோபம் வருவது இயல்பானதுதான். சேலத்தில் சில தினங்களுக்கு முன்னர் நாக்கை துருத்தினார், பாதுகாவலரை குத்தினார். இப்போது கூட்டணி கட்சி நிர்வாகியை அடிக்க கை ஓங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications