பக்ரீத் பண்டிகை அன்று 'குர்பானி' கொடுக்கும் விஜயகாந்த்
சென்னை: பக்ரீத் பண்டிகை அன்று தான் குர்பானி வழங்கவிருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இஸ்லாம் மார்க்கத்தில் பக்ரீத் பண்டிகை தியாகத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு குர்பானி வழங்கி எல்லோரும் ஒன்றாக அன்றைய தினம் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவது இயல்பு. பொதுவாக இஸ்லாம் மார்க்கம் ஈகையையும், தியாகத்தையும் போற்றுவதாகும். அந்த வகையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது பொருத்தமான ஒன்றாகும்.
தேமுதிக சார்பில் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பக்ரீத் பண்டிகையில் கலந்து கொண்டு இஸ்லாமிய பெருமக்களுக்கு கறி வழங்கி சிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் ஆங்காங்கே உள்ள தேமுதிக நிர்வாகிகள் பக்ரீத் பண்டிகை அன்று இஸ்லாமியர்களுக்கு கறி வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
தே.மு.தி.க. தலைமை கழகத்தின் சார்பில் 16-ந்தேதி புதன்கிழமை அன்று மாலை 4மணி அளவில் பக்ரீத் பண்டிகை கொண்டாடும் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு குர்பானி வழங்க இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இஸ்லாமிய பெருமக்களும், கழகத் தோழர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications