மாநாட்டை வெற்றி பெறச் செய்யுமாறு தேமுதிக தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்
சென்னை: காஞ்சிபுரம் வேடல் பகுதியில் நடைபெறும் தமிழக அரசியலின் திருப்புமனை மாநாட்டுக்கு தேமுதிக தொண்டர்கள் குடும்பத்தோடு பங்கேற்க அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
தேமுதிகவின் மாநாடு நாளை மாலை 3 மணிக்கு காஞ்சிபுரம் - வேடல் பகுதியில் நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்று வெற்றி பெறச் செய்யுமாறு அக்கட்சித் தொண்டர்களுக்கு தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேமுதிகவின் அரசியல் திருப்புமுனை மாநாடு காஞ்சிபுரம் வேடலில் 20-ம் தேதி (சனிக்கிழமை) நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் தங்களது நண்பர்கள், குடும்பத்தார் என அனைவரையும் அழைத்து வரவேண்டும்.
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்திட சட்டப்பேரவை தேர்தலையொட்டி நடத்தப்படும் இந்த மாநாட்டை அனைத்து தரப்பு மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கிற வகையில், துணிந்திடு தவறுகளை களைந்திடு புதிய மாற்றத்துக்கான ஆரம்பம் என்ற முழக்கத்தோடு மாநாடு நடத்தப்படுகிறது.
தேமுதிகவின் லட்சியப் பயணம் மக்கள் நலனுக்கான பாதையில் இருக்கும் என்பதை தமிழக மக்கள் தெரிந்து கொள்வதற்கு இந்த மாநாட்டை தேமுதிகவினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாநாட்டுக்கு வருவதற்காக முன் பதிவு செய்யப்பட்ட தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள், ஆட்சியாளர்களின் மிரட்டுதலால் முன் தொகையை திருப்பி அளித்து வருவதாக மாவட்டச் செயலாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கெல்லாம் அஞ்சிடாமல், ரயில், கார், வேன் போன்றவற்றின் மூலம் மாநாட்டுக்கு வந்துவிடுங்கள். மேலும், தொண்டர்கள் வருகையை தடுக்க காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தக் கூடும். எனவே, மாநாட்டு திடலுக்கு மதியம் 3 மணிக்கு முன்பாகவே தொண்டர்கள் வந்துவிட வேண்டும்.
நம்முடைய "தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு" மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்ற ஆர்வமும், அக்கறையும் தங்களுக்கு எந்த அளவிற்கு உள்ளதோ, அதைப் போல இதில் கலந்து கொள்கின்ற கழக நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், தாய்மார்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பு பொதுமக்களும் பாதுகாப்பாக வந்து செல்ல வேண்டும் என்பதில் நான் மிகுந்த அக்கறையுடன் கண்ணும், கருத்துமாக இருக்கின்றேன்.
எனவே, கழக நிர்வாகிகள் எவ்வளவு முன் கூட்டி மாநாட்டிற்கு அனைவரையும் அழைத்து வருகின்றீர்களோ, அதைப் போலவே மாநாடு முடிவடைந்த பிறகு காத்திருந்து, பொறுமையாக தங்களுடன் வந்தவர்களை எல்லாம் ஒன்றிணைத்து, அவரவரின் இருப்பிடங்களுக்கு பத்திரமாக அழைத்துச் செல்ல வேண்டியது தங்களின் தலையாய கடமையாகும். வாகனங்களை ஒழுங்கு படுத்துவதற்கும், மாநாட்டில் கலந்துகொள்பவர்களை ஒழுங்குபடுத்தி அமர வைப்பதற்குமான பணியில் தொண்டர் அணியை சார்ந்தவர்கள் ஈடுபடுவார்கள்.
மேலும், மாநாட்டுக்கு பாதுகாப்போடு வந்து பாதுகாப்போடு செல்ல வேண்டும். ‘காஞ்சி குலுங்கட்டும், காலம் கனியட்டும் ஆட்சி மாறட்டும்' என்ற கோஷத்துடன் தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாட்டை வெற்றிபெறச் செய்ய வேண்டும்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.