பயந்து ஓடிய "வேட்பாளர்கள்"... பயங்கர "ஷாக்"கில் விஜயகாந்த்!
சென்னை: கிட்டத்தட்ட நடிகர் கார்த்திக் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் விஜயகாந்த். ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட இவருக்கு வேட்பாளரே கிடைக்கவில்லையாம். யாருமே போட்டியிட முன்வராததால் கடும் அப்செட்டாகி விட்டாராம் அவர்.
என்னதான் எதிர்க்கட்சி என்றாலும், அடுத்த தேர்தலி்ல் வலுவான கூட்டணி அமைக்க முயற்சிகள் எடுத்து வந்தாலும் கூட ஜெயலலிதாவை எதிர்த்து களம் காண தேமுதிகவில் யாருமே முன்வரவில்லையாம்.

இத்தனைக்கும் தனக்கு மிகவும் நெருக்கமான, நம்பிக்கையானவர்களிடம்தான் போட்டியிடுகிறீர்களா என்று கேட்டுப் பார்த்துள்ளாராம் விஜயகாந்த். ஆனால் அவர்கள் தற்போது கட்சி அலுவலகம் பக்கமே வராமல் பதுங்கி இருக்கிறார்களாம்.
அதிமுகவின் பண பலம், ஆள் பலம், அதிகார பலம் ஆகியவற்றுக்கு முன்பு தங்களால் தாக்குப் பிடிக்க முடியாது என்று இவர்கள் புலம்பி வருகிறார்களாம். இவர் பாட்டுக்கு நிறுத்தி விட்டுப் போய் விடுவார். பின் விளைவுகளை நாம்தானே சந்திக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்களாம்.
டிராபிக் ராமசாமிக்கு ஆதரவு தருவதற்குப் பதில் நாமே ஜெயலலிதாவுக்கு டப் பைட் கொடுக்கலாம் என்பதுதான் விஜயகாந்த்தின் எண்ணம். ஆனால் அதற்கான சாத்தியக் கூறு சுத்தமாக இல்லாமல் போய் விட்டது தற்போது.
ஆர்.கே.நகரில் நிறுத்துவது தொடர்பாக சிலரை தேர்வு செய்து அவர்களை அழைத்து விஜயகாந்த்தும், பிரேமலதாவும் பேசியதாக சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவருமே எங்களால் அவர்களுடன் மோத முடியாது, மன்னிச்சிருங்க என்று கூறி ஜகா வாங்கி விட்டனராம்.
இதனால் அதிர்ச்சியாகி விட்டாராம் விஜயகாந்த். காரணம், அவர் கூப்பிட்டு கருத்து கேட்ட அனைவருமே விஜயகாந்த்தின் தீவிர விசுவாசிகள். அவர் சொன்னலை தட்டாமல் செய்யக் கூடியவர்களாம். அவர்களே இப்படிச் சொன்னது கட்சி குறித்த கவலையையும் சேர்த்து விஜயகாந்த்துக்கு ஏற்படுத்தி விட்டதாம்.
இப்படி வேட்பாளரை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால்தான் தேர்தலில் நிற்கும் முடிவிலிருந்து தேமுதிக பின்வாங்கியுள்ளதாக சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications