நண்பா மீண்டும் எழுந்து வா... இப்ராஹிம் ராவுத்தருக்கு விஜயகாந்த் கண்ணீர் கடிதம்
காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ மனக் கஷ்டங்களும், சந்தோஷங்களும் வந்து சென்றிருந்தாலும் என்றுமே உன்னை என் மனம் மறந்ததில்லை. இப்ராஹிம் நீ மீண்டும் நல்ல ஆரோக்கியத்தோடு நலம் பெற்று வரவேண்டும் என்பதே என் பிரார்த்தனை. நண்பா மீண்டு வா எழுந்து வா...!" என்று தனது நண்பருக்காக கண்ணீருடன் கடிதம் எழுதியுள்ளார் விஜயகாந்த்.

விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், திரையுலகப் பிரமுகருமான இப்ராஹிம் ராவுத்தர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விஜயகாந்தும், இப்ராஹிம் ராவுத்தரும் எத்தகைய நண்பர்கள் என்பதை தமிழ் சினிமாவுலகம் நன்கு அறியும். மதுரையில் இருந்து இளம் வயதில் ஒன்றாக கிளம்பிய இருவரும், சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று போராடினார்கள். அதுவும் தனது நண்பர் விஜயகாந்த்தை ஹீரோவாக்கி அழகு பார்த்தவர் ராவுத்தர். பெரிய ஹீரோவாக வளர்ந்த பின்பும் இருவரும் ஒன்றாகவே இருந்தனர். விஜயகாந்தின் திருமணம் வரைக்கும் ஒன்றாகவே இருந்த இருவரும் அதற்கப்புறம் அந்த நட்பை தொடர முடியாமல் போனது காலத்தின் கோலம்.

தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ராவுத்தர். அவரது நிலைமை மிக மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். சுயநினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று மருத்துவமனைக்குச் சென்று பார்த்தார். தனது நண்பர் சுயநினைவின்றி இருப்பதைப் பார்த்ததும் கண்ணீர் விட்டு அழுதார் விஜயகாந்த்.

இதைத்தான் தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள் எனவேதான் நண்பரின் நிலைக்கு வருந்தி கண்ணீர் கடிதம் எழுதியுள்ளார் விஜயகாந்த்.
அதில்,
"நண்பா... நீ உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாய் என்ற செய்தி கேட்டு வேதனையுடன் உன்னை நலம் விசாரிக்க வந்தேன். அங்கு நீ சுய நினைவு கூட இல்லாத நிலையில் கட்டிலில் இருந்ததை கண்டதும் என் மனம் பட்ட துயரத்தை நான் மட்டுமே அறிவேன்.
உன்னைக் கண்டவுடன் நாம் சிறுவயது முதல் கொண்ட உண்மையான நட்பும், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற உறுதியோடு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமா உலகில் நாம் போராடி பெற்ற வெற்றி, தோல்விகளும் என் கண் முன்பே வந்து சென்றது.
காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ மனக் கஷ்டங்களும், சந்தோஷங்களும் வந்து சென்றிருந்தாலும் என்றுமே உன்னை என் மனம் மறந்ததில்லை. இப்ராஹிம் நீ மீண்டும் நல்ல ஆரோக்கியத்தோடு நலம் பெற்று வரவேண்டும் என்பதே என் பிரார்த்தனை. நண்பா மீண்டு வா எழுந்து வா...!"
என்று கண்ணீருடன் எழுதியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications