உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்துக்கு முரசு கொட்டாதாம்!- ஜூவி கருத்துக்கணிப்பு
சென்னை: தேமுதிக தலைவரும் மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தோல்வியடைவார் என்று ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.
இந்த தொகுதியில் அதிமுக, திமுக, பாமக, தேமுதிக என நான்கு முனைப் போட்டி நிலவுவதால் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் இழுபறி நிலையே நீடிக்கிறது என்றும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கிடையே தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியின் 'கிங்' ஆக களமிறங்கியுள்ளார் விஜயகாந்த். திமுக, பாஜக என கூட்டணிக்கு வருந்தி வருந்தி அழைத்தும் யாருக்கும் பிடி கொடுக்காமல் இருந்தார் விஜயகாந்த்.
கிங் ஆ, கிங் மேக்கரா என்று கேட்டு தனது தலைமையில்தான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்த விஜயகாந்தை மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் கிங் ஆக ஏற்றுக்கொண்டனர்.
மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்கள், தமாகா, தேமுதிக என ஆறு கட்சிகள் கொண்ட கூட்டணி தனி அணியாக இந்த தேர்தலை சந்திக்கிறது. இதில் மக்கள் நலக்கூட்டணி தேமுதிக முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

நான்கு முனை போட்டி
உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் போட்டியிடுகிறார். விஜயகாந்துக்கு எதிராக வலுவான வேட்பாளர்களை அதிமுக, திமுக, பாமக களமிறக்கியுள்ளது. விஜயகாந்தை எதிர்த்து அதிமுக சார்பில் குமரகுரு, திமுக வேட்பாளர் வசந்தவேல், பாமக வேட்பாளர் பாலு ஆகியோர் கடும் நெருக்கடியை கொடுத்து வருகின்றனர்.

விஜயகாந்துக்கு ஆதரவு
ஜூனியர் விகடன் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜயகாந்துக்கு வாக்களிப்போம் என்று 23 சதவிகிதம் பேர் கருத்து கூறியுள்ளனர். அதிமுகவிற்கு வாக்களிப்போம் என்று
24 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

திமுக - பாமக
திமுகவிற்கு வாக்களிப்போம் என்று 27 சதவிகிதம் பேரும் பாமகவிற்கு வாக்களிப்போம் என்று 20 சதவிகிதம் பேரும் கருத்து கூறியுள்ளனர். நான்குமுனை போட்டியால் திமுக முந்துவது போல தெரிந்தாலும் அதிமுக, திமுக இடையே இழுபறி நிலை நிடிப்பதாகவே கூறியுள்ளது ஜூனியர் விகடன்.

விஜயகாந்த் தோல்வி
2006ம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் முதன்முறையாக விருத்தாசலத்தில் போட்டியிட்ட விஜயகாந்த் வெற்றி பெற்றார், 2011 தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறையும் ரிஷிவந்தியத்தில் போட்டியிட்டால் தோல்வி அடையும் நிலை இருந்ததாலே அவர், உளுந்தூர்பேட்டை தொகுதியை தேர்ந்தெடுத்தாக கூறப்படுகிறது, ஆனாலும் அவர் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தோல்வியை தழுவுவார் என்றும் 3வது இடமே பெறுவார் என்றும் ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.
விஜயகாந்துக்கு முரசு கொட்டுமா? மக்களின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை மே 19ம் தேதி தெரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications