ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளை காப்பாற்ற ஒரு வழி வைத்துள்ளேன்: விஜயகாந்த் பேச்சு
திருவாரூர்: தேமுதிக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற ஒரு வழி வைத்திருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் 'மக்களுக்காக மக்கள் பணி' மூலம் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று இரவு நடைபெற்றது. விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் விஜயகாந்த் பேசியதாவது:
தி.மு.க.-அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்து தமிழக விவசாயிகளுக்கு ஒன்றும் செய்யவில்லை. காவிரி பிரச்சினையில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
நான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளை காப்பாற்ற ஒரு வழி வைத்துள்ளேன். இதை நான் இன்னும் வெளியில் சொல்லவில்லை. தற்போது சொன்னால் அத்திட்டத்தை அரைகுறையாக செய்து ஜெயலலிதா குழப்பத்தை ஏற்படுத்தி விடுவார்.
பருப்பு விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால் உணவுத்துறை அமைச்சரான இந்த பகுதியை சேர்ந்த காமராஜ் விலை குறைந்துள்ளது என்கிறார். ரூ. 200-க்கு விற்ற பருப்பு இன்று 10 ரூபாய் மட்டும் குறைந்துள்ளது. 93 ஆயிரம் டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என கூறி உள்ளனர்.
தீபாவளி வரை பருப்பு விலை குறைய போவதில்லை. தீபாவளிக்கு நீங்கள் பருப்பு சாம்பார் வைப்பதை விட சிக்கன், மட்டன் குழம்புக்கு மாறி விட வேண்டியது தான். தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் கொடுத்த வாக்குறுதியை மறக்க மாட்டோம்.
திருவாரூர் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தண்ணீர் இன்றி கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இவர்களுக்காக போராடுவதற்கு நான் குடும்பத்தோடு வர இருக்கிறேன். அது சிறை நிரப்பும் போராட்டமாக இருந்தாலும் என்னோடு தொண்டர்களும் வருவார்கள்.
தமிழகத்தில் நான் செல்லாத இடம் எதுவும் இல்லை. தே.மு.தி.க.வில் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். 2016-ம் ஆண்டு தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.












Click it and Unblock the Notifications