ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் விஜயகாந்த் திடீர் சந்திப்பு! காவல் நிலையங்களில் மது விற்க 'யோசனை'
சென்னை: காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்து திடீர் ஆலோசனை நடத்தினார்.
அமளியில் ஈடுபட்ட மக்களவை காங்கிரஸ் எம்.பிக்கள் 25 பேரை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்தார். இதை எதிர்த்து சென்னை அண்ணா சாலையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி நடந்த போராட்டத்தை தொடர்ந்து காங். தலைவர் இளங்கோவன், குமரி அனந்தன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, புதுப்பேட்டை பகுதியிலுள்ள சமூக நலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
சமூக நலக் கூடத்திற்கு திடீரென வருகை தந்த, விஜயகாந்த், அங்கு இளங்கோவனை நேரில் சந்தித்துப் பேசினார். இதன்பிறகு நிருபர்களிடம் பேசிய விஜயகாந்த் "தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த போராடி வரும் கட்சிகளுக்கு ஊடகங்களும் ஆதரவு அளிக்க வேண்டும். ஊடகங்களும் மதுவிலக்குக்கு ஆதரவாக செயல்பட வேண்டும்.
யாருக்கும் பயப்படாமல், ஊடகத்தை முடக்கி விடுவார்களோ என்றெல்லாம் அஞ்சாமல், மதுவிலக்குக்காக போராடும் கட்சிகளுக்கு, ஆதரவு அளிக்க வேண்டும்" என்றார்.
முன்னதாக, போராட்டம் நடத்திவரும் மாற்றுத்திறனாளிகளை சந்தித்த விஜயகாந்த் நிருபர்களிடம் கூறுகையில், "
மாற்று திறனாளிகளை இந்த அரசு மோசமாக கையாண்டுள்ளது. மேலும், மது விலக்கு விவகாரத்தில் கோர்ட்டை அரசு ஏமாற்றிவருகிறது. டெல்லியை போல, தமிழகத்தில் மதுபான கடைகள் நடத்தப்படுவதாக தமிழக அரசு கூறுவது தவறு.
டெல்லியில், தமிழகத்தை போல, தெருவுக்கு 9 கடைகள் கிடையாது. எல்லோரும் மதுவிலக்கு கேட்கும்போது இந்த 'அம்மாவுக்கு' மட்டும் என்ன வந்துச்சு.. ஏன் முடிவை அறிவிக்கவில்லை.
மதுபான கடைகளுக்கு போலீசார் பாதுகாப்பு கொடுத்து வருகிறார்கள். இதற்கு பதிலாக மதுபானங்களை காவல் நிலையத்திலேயே விற்கலாம் என்ற நிலை வரும்போல இருக்கிறது" இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்தார்.