வழக்கம் போல 'பறந்தார்' விஜயகாந்த்.. சிங்கப்பூருக்கு அல்ல, மும்பைக்கு!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று திடீரென சென்னையிலிருந்து கிளம்பி மும்பைக்குப் போய் விட்டார். அவர் போன காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. மருத்துவப் பரிசோதனை என்று பொத்தாம் பொதுவாக சொல்லப்பட்டுள்ளது.
கடந்த சட்டசபை பொதுத் தேர்தலுக்குப் பிறகு அடிக்கடி வெளிநாடுகளுக்குப் போய் வருகிறார் விஜயகாந்த். மருத்துவ சிகிச்சைக்காக அவர் போய் வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சிங்கப்பூருக்கு அடிக்கடி அவர் சென்று வருகிறார்.
இந்த நிலையில் இன்று திடீரென மும்பைக்குப் பறந்தார். இதற்காக தனது மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ் ஆகியோருடன் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார் விஜயகாந்த். அவரைப் பார்த்து செய்தியாளர்கள் திரண்டு வந்தனர் - ஏதாவது கேள்வி கேட்கலாம் என்று.
ஆனால் டெல்லியில் "தூக்கி அடிச்சேன்னா" சம்பவத்திற்குப் பிறகு செய்தியாளர்களைக் கண்டாலே காத தூரம் செல்லும் விஜயகாந்த் இன்றும் அவர்களைப் பார்க்க மறுத்து விட்டார். விமானம் கிளம்பும் வரை விஐபி அறைக்குள் போய் அமர்ந்து கொண்ட அவர் விமானத்தில் ஏறுவதற்காக மட்டுமே வெளியே வந்தார்.
எதுக்கு மும்பை போகிறார் என்று விமான நிலையம் வந்த தேமுதிகவினர் சிலரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது மருத்துவப் பரிசோதனைக்காக போகிறார் என்றார்கள்.