ஜூன் 4ம்தேதி தேமுதிக நிர்வாகிகள் கூட்டம்: பாஜக கூட்டணிக்கு முழுக்கா?
சென்னை: தேர்தலில் தேமுதிக பெற்ற படுதோல்விக்கு பிறகு முதன்முறையாக வரும் 4ம்தேதி விஜயகாந்த் தலைமையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்த உள்ளார். பாஜக கூட்டணியில் தொடருவதா வேண்டாமா என்பது குறித்து இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டது. பாஜகவுடன் தேமுதிக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தலில் அதிமுக 37 இடங்களில் வென்றது. பாஜக, பாமக, புதுவை என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியில் வென்றன. பாஜ கூட்டணியில் அதிக இடங்களை பிடிக்க முடியாவிட்டாலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் செய்த பிரசாரம் பாஜவினரிடம் வரவேற்பை பெற்றது.இதனால், டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்துக்கு சென்றிருந்த விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோருக்கு மிகுந்த மதிப்பு தரப்பட்டது. மோடி அப்போது விஜயகாந்தின் கன்னத்தை தடவி, கட்டிப் பிடித்து பாராட்டினார்.
ஆனால் அதன்பிறகு விஜயகாந்தை பாஜகவில் யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. டெல்லியில் 3 நாட்கள் தங்கியிருந்த விஜயகாந்த், பிரதமர் மோடி, பாஜ தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்திக்க முயற்சித்தார். ஆனால், அவர்கள் விஜயகாந்தை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவை சந்திக்க வரும் 3ம் தேதி பிரதமர் மோடி நேரம் ஒதுக்கியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது அரசியல் பேசப்படலாம் எனதெரிகிறது. அதிமுகவை பாஜக தனது கூட்டணியில் இணைக்க முயலுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் தனக்கு நேரம் ஒதுக்காமல், முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடனடியாக நேரம் ஒதுக்கியதும், தேர்தலுக்கு பின் தங்களுக்கு பாஜ தலைவர்கள் மதிப்பளிக்காததும் விஜயகாந்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வரும் 4ம் தேதி தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தவுள்ளார். அதில் பாஜ கூட்டணியில் நீடிப்பதா அல்லது விலகுவதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications