'நான் ஒரு குழப்பவாதியே...': பிறந்த நாள் விழாவில் விஜயகாந்த் பரபரப்பு பேச்சு
சென்னை: "அரசியல் கட்சிகள் நான் என்ன செய்கிறேன் என்று குழம்பி உள்ளன. குழப்பத்தை ஏற்படுத்துவதுதான் நான் என்று பிறந்த நாள் விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசியிருப்பது பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு மக்களுக்காக மக்கள் பணி என்ற பெயரில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு, விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் நேற்று இரவு சென்னையை அடுத்த மறைமலைநகரில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று விஜயகாந்த் பேசியதாவது:
பூந்தமல்லி அருகே உள்ள குமணன்சாவடியில் மழை பெய்த தண்ணீர் அப்படியே நிற்கிறது. இது பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருக்கிறது. என்ன செய்கிறது அரசு.? இந்த அதிமுக அரசுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.
பயந்துவிட்ட ஜெயலலிதா
ஈவிகேஎஸ் இளங்கோவன் தவறாக பேசிவிட்டார் என்கிறார்கள். அவர் தான் பேசியதை தவறாக நினைக்க வேண்டாம் என்று சொல்லிட்டாரே. மதுரை, தூத்துக்குடி வரை சென்றேன். அங்கு அவருக்கு எதிராக எங்கும் எதுவும் நடக்கவில்லை. எங்க எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்துவிடுவார்களோ என்ற பயத்தில் அதிமுகவினர் போராட்டம் நடத்த வேண்டாம் என்று ஜெயலலிதா சொல்கிறார். கூட்டணி பற்றி இப்போது பதில் சொல்லத் தேவையில்லை. ஏனென்றால் தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது.
சட்டசபைக்கு போகாதது இதற்கு...
ஜெயலலிதா கடந்த 4 ஆண்டுகாலமாக என்ன செய்தார். சட்டசபையில் 110 விதியை படித்தார்கள். சட்டசபையில் பூஜ்ஜிய நேரம் என்று உள்ளது. ஏதேனும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கடிதம் கொடுத்தால் 24 மணி நேரத்திற்கு முன்பு கொடுக்க வேண்டும் என்பார்கள். ஆனால் அதிமுகவினர் கொடுத்தால் அன்றைக்கே எடுத்துக்கொள்கிறார்கள். இதற்குதான் சட்டசபைக்கு போகவில்லை.
லிஸ்ட் வரும்
சட்டசபையில் இதுபற்றி கேள்வி கேட்டால் இது சினிமா இல்லை. இது சினிமா இல்லை என்று கத்துகிறார்கள். சினிமாக்காரன் நான் இல்லை. உங்க அம்மாதான். நத்தம் விஸ்வநாதன் பேசுகிறார் வானத்தில் மின்வெட்டு இருக்கலாம், ஆனால்தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது என்றார். நீங்கள்ஆட்சிக்கு வந்து என்ன மின் திட்டங்கள் போட்டீர்கள். என்ன ஊழல் பண்ணீங்க என்ற லிஸ்ட் வரிசையாக வரும்.
அரசியல் கட்சிகள் விஜயகாந்த் என்ன செய்கிறான் என்று குழம்பி உள்ளன. குழப்பத்தை ஏற்படுத்துவது தான் விஜயகாந்த். வழக்குகளை கண்டு தே.மு.தி.க. அஞ்சாது.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.