மீனவர்கள் பிரச்சினை முடிந்தபாடில்லை.. சும்மா லெட்டர் மட்டும்தான் போகுது... விஜயகாந்த்
சென்னை: ஒவ்வொரு முறையும் இலங்கை அரசு தமிழக மீனவர்களை கைது செய்து, படகுகளை பறிமுதல் செய்து, அவர்களை தாக்கும் போது, பிரதமருக்கு கடிதம் எழுதுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார் முதலமைச்சர் ஜெயலலிதா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக மீனவர்கள் பிரச்சனைகள் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக மீனவர்களின் பிரச்சனை முடிவே இல்லாத நீண்ட நெடும் பிரச்சனையாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டுள்ளனர்.
இலங்கை சிறையில் இருக்கும் 73 மீனவர்களையும் 101 படகுகளையும் உடனடியாக இலங்கை அரசு விடுவிப்பதோடு, இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படா வண்ணம், மிக உறுதியான தீர்வை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும்.
இதற்கான தீர்வாக கச்சத்தீவை மீட்டெடுப்பது ஒன்று தான் தீர்வு என்று சொல்லும் ஜெயலலிதா, 1991-ல் முதல் முறையாக முதலமைச்சராக பதவி ஏற்ற நாளில் இருந்து இன்று வரை கச்சத்தீவை மீட்பேன் என்று கூறி கொண்டே இருக்கிறாரே தவிர, அதற்கான எந்த முன்னேற்றமான நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் இலங்கை அரசு தமிழக மீனவர்களை கைது செய்து, படகுகளை பறிமுதல் செய்து, அவர்களை தாக்கும் போது, பிரதமருக்கு கடிதம் எழுதுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார் முதலமைச்சர் ஜெயலலிதா.
ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதுவதும் உடனே வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை அரசுக்கு கடிதம் எழுதுவதுமான, கடித போக்குவரத்து மட்டும் நடக்கிறதே தவிர, ஆக்கபூர்வமான முன்னேற்றம் ஏதும் இல்லை.
கடிதம் எழுதுவதோடு நம் கடமை தீர்ந்து விட்டது என்று நினைக்கும் முதலமைச்சர், இனிமேலும் அக்கறை இல்லாமல் இருப்பது வேதனைக்குரியது. அதற்கு பதில் மீனவர்களை நேரடியாக அழைத்து பேசி நமது எல்லைகளை தவிர வேற பகுதிக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும்.
வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளான செயற்கைக்கோள் மூலம் மீன் வளம் அதிகம் உள்ள பகுதியை கண்டறிதல், பாதுகாப்பாக ஆழ் கடல் பகுதிக்கு சென்று மீன் பிடிக்கும் வண்ணம் அவர்களுக்கு முறையாக பயிற்சி அழிப்பதும், அதற்கான சிறப்பு படகு உபகரணங்களை வழங்கி ஊக்கப்படுத்துவதும், நம் எல்லைக்குள் மீன்வளத்தை பெருக்க நடவடிக்கை எடுப்பதும், மீன் பிடி காலத்தை வரைமுறைபடுத்துதலும், மீன் பிடி காலம் இல்லாத காலங்களில் அவர்களுக்கு அரசாங்கமே வேறு வகையான வேலைகளை தருவதும் போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களை மேற்கொள்ள வேண்டும்.
கடலில் அடிக்கும் அலைகள் ஓய்வதில்லை அதுபோல் கடலையே நம்பி வாழும் மீனவர்களின் வாழ்க்கையிலும் பிரச்சனைகள் ஓய்வதில்லை. அமைதியில்லாமல் அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு பாதுகாப்பான நிலையை இந்த அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.