தமிழர் உணர்வை வஞ்சிக்காதே.. ஜல்லிக்கட்டை நடத்த விஜயகாந்த் அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம்
இந்த ஆண்டு பொங்கலுக்கு ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று கோரி அலங்காநல்லூரில் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பட்டன.
சென்னை: பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில் அதன் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி தேமுதிக சார்பில் அதன் தலைவர் விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்றது.
பொங்கல் திருவிழாவின் போது ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கான போட்டி ஆண்டு தோறும் தென்மாவட்டங்களில் நடத்தப்படும். அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மிக பிரசித்தம். இந்த விளையாட்டை கடந்த இரண்டாண்டுகளாக நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், பல்வேறு கட்சிகள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து இன்று தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், காலம் காலமாக நடந்து வரும் ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும். தமிழர்களின் உணர்வுகளை வஞ்சிக்காதே, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை தேமுதிக தொண்டர்கள் முழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.