கெஞ்சிக் கேட்டுக்கிறேன், சிந்தியுங்கள் மக்களே...பிரசாரத்தைத் தொடங்கினார் விஜயகாந்த்
சென்னை: தேமுதிகவின் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கையோடு தனது பிரசாரத்தைத் தொடங்கி விட்டார் தலைவர் விஜயகாந்த்.
கும்மிடிப் பூண்டியில் நடந்த முதல் பிரசாரக் கூட்டத்தின்போது சட்டம் ஒழுங்கு நிலை தமிழகத்தில் மிகவும் மோசமாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டிப் பேசினார்.
தமிழக பாஜக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வந்தது. தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிக்கப் பட்டு நேற்று பாஜக தனது கூட்டணி விவரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடிவு செய்திருந்தது. இதற்காக அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் சென்னை வருவதாக இருந்தது.

ஆனால், பேச்சுவார்த்தையில் தெளிவான முடிவுகள் எடுக்கப்படாத நிலையில் ராஜ்நாத் சிங்கின் சென்னைப் பயணம் ரத்தானது. இந்நிலையில் இன்று தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று மாலை 5 மணி வரை அப்படி எதுவுமே வெளியாகவில்லை. மாறாக ம்தியம் வரை பேச்சுவார்த்தைதான் நடந்து கொண்டிருந்தது.
இதனால் விஜயகாந்த் பிரசாரத்திற்குக் கிளம்புவது தாமதமாகி வந்தது. பேச்சுவார்த்தை இழுபறியாகிக் கொண்டிருந்த நிலையில் விஜயகாந்த் சட்டென்று பிரசாரத்திற்குப் புறப்பட்டு விட்டார்.
இருப்பினும் அவர் புறப்படுவற்கு முன்பு முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து விட்டார். அதன்படி 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
இதையடுத்து தனது பிரசாரத்தை விஜயகாந்த் தொடங்கினார். கும்மிடிப் பூண்டியில் அவர் முதலில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
முன்ன பின்னத்தான் இருக்கும்
என்னுடைய பேச்சு முன்ன பின்ன இருக்கும். நான் எழுதி வச்சு படிக்கிறது இல்ல. அப்படித்தான் இருக்கும். நடந்து போகும்போது ஒருத்தன் டக்குன்னு குள்ளமா ஆயிடுறான். அந்த அளவுக்கு ரோடு மோசமா இருக்கு. தமிழகத்தில் தமிழகம் இருளில் மூழ்கி கிடக்கிறது.
எனக்கு கிட்னி மாற்றியிருக்காங்க என்று எழுதுறாங்க. கிட்னி மாற்றினா நான் எப்படி இங்க பேச முடியும். பசி வந்தா பத்தும் பறக்கும். கோபம் வந்தா காட்டு. காட்டலேன்னா மக்கள் கிட்ட மறைக்கிறன்னு அர்த்தம்.
அவுங்களை நம்பி இருந்தவங்க யாரு இருக்கா? இன்றைக்கு கம்யூனிஸ்ட் கட்சி படும் பாட்டை பாருங்க. சிந்திங்க மக்களே. காசு கொடுத்தா வாங்கிக்குங்க. வறுமையை பயன்படுத்திக்கிறாங்க. நீங்களும் வர்றத பயன்படுத்திக்குங்க. கொள்ளை கொள்ளையா அடிச்சி வச்சிருக்காங்க. அத வாங்கிக்குங்க. ஆனா, சிந்திச்சி ஓட்டு போடுங்க.
முன்னாடியே பெட்டி வாங்கியிருக்கீங்களா...
டெல்லிக்கு போனாரு பெட்டி வாங்கிட்டாருன்னு சொல்லுறாங்க. அப்படீன்னா அவுங்களுக்கு முன்னேயே வாங்கிய அனுபவம் இருக்கு போலிருக்கு.
யோக்கியமா இருந்தா பெங்களூர் கோர்ட்டில் ஆஜராகி, வழக்கை முடிக்க வேண்டியதானே. அமைதி- வளம்- வளர்ச்சின்னு சொல்லுறாங்க. அமைதி எங்க இருக்கு. வளமும் வளர்ச்சியும் அவுங்ககிட்டதான் இருக்கு.
அரைச்சாத்தானே கஷ்டம் தெரியும்
இலவசத்தை விலையில்லா பொருட்கள் என்று சொல்லுறாங்க. அந்த விலையில்லா பொருட்களுக்கும் ஒரு விலைவைக்கிறாங்க. அது கூட இன்னமும் பாதி பேருக்கு கிடைக்கல. கரண்ட் இருந்தானே அதுவும் உபயோகப்படும். இல்லேன்னா அரைக்க வேண்டியதுதான். அரைச்சாத்தானே கஷ்டம் தெரியும்.
எனக்கு ஒன்றும் பயம் கிடையாது. என்ன ஒரு மாசம் ஜெயில்ல போடுவீங்க. இல்லேன்னா ஒரு வருசம் உள்ள போடுவீங்க. போடுங்க... இந்த தொகுதியில ஒரு அமைச்சர் இருக்கிறாரு. சினிமாவுல அவரு லஞ்சம் வாங்குறாரு. இதனால ஆத்தாடின்னு சினிமாக்காரவுங்க ஓடுறாங்க.
என்ன லஞ்சமா துலங்க வரும்...
தொட்ட இடம் துலங்க வருமுன்னு பாட்டு போடுறாங்க. என்ன லஞ்சமா துலங்க வரும். வெளிநாட்டுல இருக்குற கறுப்பு பணத்தை கொண்டுவருவேன்னு நேற்று பேசுறாங்க அந்த அம்மா. மொதல்ல உங்ககிட்ட இருக்கிற கறுப்பு பணத்தை வெளியில கொண்டு வாங்க. உள்நாட்டுல இருக்குற கறுப்பு பணத்தை மொதல்ல வெளியில கொண்டு வரமுடியுமா?
இந்த பகுதியில் ஆணை கட்டித்தர்றேன்னு சொன்னாங்க. செஞ்சாங்களா? மீனவர்கள் 250 பேருக்கு வேலை தர்றேன்னு சொன்னாங்க. தந்தாங்களா? வீடு கட்ட இடம் தர்றேன்னு சொன்னாங்க. தந்தாங்களா? மக்களே சிந்திங்க மக்களே. இந்த முறை நல்ல பாடத்தை கொடுக்கணும். கெஞ்சிக் கேட்டுக்கிறேன் மக்களே என்று பேசினார் விஜயகாந்த்.
தொடர்ந்து 27-ந்தேதி வரை 14 நாட்கள் முதல்கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் விஜயகாந்த். இன்று வடசென்னை தொகுதி கொளத்தூர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பல்லாவரம் (இரவு 7 மணி) ஆகிய இடங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அதேபோல், நாளை (15-ந்தேதி ) அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு, ஆரணி தொகுதி செய்யாறு ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளும் விஜயகாந்த் மாலை 7 மணிக்கு வேலூரில் பிரசாரம் மேற்கொள்கிறார்.












Click it and Unblock the Notifications