தமிழகம் முழுவதும் அங்காடிகளில் ரூ.110 க்கு துவரம் பருப்பை விற்பனை செய்ய விஜயகாந்த் வலியுறுத்தல்
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அங்காடிகளில் ரூ.110 க்கு துவரம்பருப்பை விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் துவரம்பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை, அதிமுக அரசு கட்டுப்படுத்த வேண்டுமென்று அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தேன். தற்போது அதிமுக அரசு சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய பெருநகர பகுதிகளில், 91 அங்காடிகள் வாயிலாக அரைகிலோ ரூ.55க்கும், ஒரு கிலோ ரூ.110க்கும் துவரம் பருப்பு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் அரசு அறிவித்தபடி துவரம்பருப்பு விற்பனை நடைபெறுகிறதா? அதற்கு தேவையான அளவு துவரம்பருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா? அங்கு தேவையான அளவிற்கு இருப்பு உள்ளதா? என்பதையெல்லாம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன்பே தெரிந்து கொள்ளவேண்டும்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த இரண்டு நாட்களாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய பெருநகரங்களில் நான் விசாரித்த வகையில், துவரம் பருப்பு முழுமையாக விநியோகம் செய்யப்படுவதாக தெரியவில்லை. காலை நேரத்தில் 11.00 மணி வரை சுமார் 200 கிலோ துவரம் பருப்பை மட்டுமே அங்காடிகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரியவருகிறது. அதன் பின்பு துவரம் பருப்பு வாங்கச் சென்றால், துவரம் பருப்புக்கு பதிலாக இல்லை என்ற வார்த்தைதான் அங்கே கிடைக்கிறது.
இதுகுறித்து அங்காடிகளின் ஊழியர்களை விசாரித்தால், துவரம் பருப்பு இருப்பு இருந்த வரைக்கும் விற்றுவிட்டோம். இனி நாளைதான் துவரம் பருப்பு அங்காடிக்கு வரும் அதன் பிறகுதான் விநியோகம் செய்யமுடியும் என்று சொல்கிறார்கள். ஆனால் அதிமுக அரசு இதுகுறித்து அறிவிப்பை வெளியிடும்போது, தமிழகம் முழுவதும் ரூ. 110க்கு துவரம் பருப்பு கிடைக்கும் என்பது போன்ற தோற்றத்துடன் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
அது நடைமுறைக்கு வரும்போது "யானைப்பசிக்கு சோளப்பொறியாக" மாறி, நான்கு பெருநகரத்தில் மட்டும் துவரம் பருப்பு விநியோகம் செய்யப்படுகிறது. அந்த நான்கு பெரு நகரங்களுக்கும் சென்று பார்க்கும்போது "கழுதை தேய்ந்து கட்டெறும்பான" கதையாக, 91 அங்காடிகளில் சுமார் 250 மூட்டை துவரம் பருப்பு மட்டுமே, தினந்தோறும் விற்பனை செய்யப்படுவதாக தெரியவருகிறது.
சட்ட மன்றத்தில் அமர்ந்துகொண்டு 110 விதியின் கீழ் வெற்று அறிவிப்புகளை தினந்தோறும் வெளியிட்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அதுபோன்ற அறிவிப்பை துவரம்பருப்பு விநியோகத்திலும் செய்துள்ளாரென தமிழக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் வேளையில், தமிழகம் முழுவதும் உள்ள அங்காடிகளில் ரூ.110க்கு துவரம்பருப்பை விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கையை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா போர்க்கால அடிப்படையில் செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications