விஜயகாந்த் எடுத்த கூட்டணி முடிவு சரியானது.. அடடே, தேமுதிகவில் இருந்து சில ஆதரவு குரல்கள்!
சென்னை: விஜயகாந்த் எடுத்த கூட்டணி முடிவு மிகவும் சரியானது என்று தேமுதிக கட்சியின் திருப்பரங்குன்றம், தொகுதி எம்.எல்.ஏவான ஏ.கே.டி.ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார்.
திமுகவோடு, தேமுதிக கூட்டணி வைத்தாக வேண்டும், நாளை பிற்பகலுக்குள் இந்த முடிவை விஜயகாந்த் அறிவிக்க வேண்டும் என்று 10 மாவட்ட நிர்வாகிகளுடன் சேர்ந்து தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் இன்று மதியம் பேட்டியளித்தார்.
இவரோடு மேலும் 2 எம்.எல்.ஏக்களும் பேட்டியின்போது உடனிருந்தனர். தேமுதிக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், தேமுதிக கட்சியின் திருப்பரங்குன்றம், தொகுதி எம்.எல்.ஏவான ஏ.கே.டி.ராஜாவை நிருபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது கூறியதாவது:

எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் தலைமை கூறியதற்கு கட்டுப்படத்தான் வேண்டும். சந்திரகுமார் போன்றோர் கட்சி தலைமையை மதிக்கவில்லை. தேமுதிகவில் அதிக நிர்வாகிகள், தொண்டர்கள், திமுகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக சந்திரகுமார் கூறியது பொய். அப்படி எந்த விருப்பமும் தொண்டர்களுக்கு கிடையாது.

விஜயகாந்த் எந்த முடிவை எடுத்தாலும் அது சரியானதாக இருக்கும். கூட்டணி குறித்து விஜயகாந்த் எடுத்துள்ள முடிவும் மிக சரியானதுதான். இவ்வாறு ராஜா தெரிவித்தார்.
கங்கவல்லி தொகுதியின் தேமுதிக பெண் எம்.எல்.ஏவான சுபா கூறுகையில், தேமுதிகவில் இருந்து கொண்டு கலகம் செய்யும் சந்திரகுமார் போன்றோரை கட்சியினர் ஒரு பொருட்டாகவே எடுப்பதில்லை. எங்களை பொறுத்தளவில் தலைவர் விஜயகாந்த் எடுக்கும் முடிவே இறுதியானது. கட்சி வேறு, விஜயகாந்த் வேறு கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications