ஜெ., கருணாநிதியை விட கூகுளில் அதிகம் தேடப்பட்ட விஜயகாந்த்
சென்னை: சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக விஜயகாந்த் அறிவித்த பின்னர், இந்திய அளவில் தேமுதிக மற்றும் விஜயகாந்த் பெயர் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதுமட்டுமின்றி இந்த ட்ரெண்டில் அதிமுக மற்றும் திமுக பின்னுக்கு தள்ளப்பட்டது. விஜயகாந்திற்குப் பின்னால்தான் கருணாநிதி, ஜெயலலிதாவும் உள்ளனர்.
சட்டசபை தேர்தல் களம் படுபரபப்பாக உள்ளது. தேர்தலில் யாருடன் விஜயகாந்த் கூட்டணி சேருவார் என்று அரசியல் கட்சிகளும், வாக்காளர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்க, தனித்துதான் போட்டியிடப்போகிறேன் என்று மகளிரணி மாநாட்டில் பேசி அரசியல் களத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளார்.

எனது கட்சியை வழி நடத்த ஊடகங்கள் எனக்கு சொல்லித்தர வேண்டாம். எனது கட்சியை நான் அருமையாக வழி நடத்தி செல்கிறேன். எனது கட்சியினர் அருமையாக இருக்கின்றனர். நான் தெளிவாக இருக்கிறேன் என்றும் பேசியுள்ளார் விஜயகாந்த்.
கூட்டணிக்காக பேரம் பேசுவதாக கூறுகிறார்கள். நான் யாரிடமும் பேரம் பேசவில்லை. பேரம் பேசவில்லை என்றால் கூட்டணி குறித்து அறிவிக்க வேண்டியதுதானே என கூறுகின்றனர். கூட்டணி குறித்து சொல்ல வேண்டுமா, இந்த தேர்தலை தேமுதிக தனியாகத்தான் சந்திக்கப் போகிறது. நான் தெளிவா சொல்றேன் கேட்டுக்கங்க. நான் தனியாத்தான் நிற்பேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த். அனைத்து கட்சியினரும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்த அனைவருக்கும் நன்றி சொன்னார் விஜயகாந்த்.
திமுக, அதிமுகவிற்கு மாற்று என்ற முழக்கத்துடன் 2005ம் ஆண்டு தேமுதிக தொடங்கப்பட்டது. 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தனித்து களமிறங்கியது. விஜயகாந்த் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று சிங்கிளாக சட்டசபைக்குள் நுழைந்தார். 2009ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது தேமுதிக. குறிப்பிடத்தகுந்த வாக்குகளை பெற்றனர் தேமுதிக வேட்பாளர்கள்.
இதனால் திராவிட கட்சிகளின் பார்வை இவர் பக்கம் திரும்பியது. 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட விஜயகாந்த் 29 எம்.எல்.ஏக்களுடன் சட்டசபை எதிர்கட்சித்தலைவர் அந்தஸ்தை பெற்றார்.
கிங் ஆக வேண்டும் என்ற முடிவில் முதல்வர் வேட்பாளராக களமிறங்கியுள்ளதோடு மீண்டும் தனித்து போட்டி என்று விஜயகாந்த் முடிவெடுத்துள்ளது நடுநிலை வாக்காளர்களை கவர்ந்துள்ளது என்றே கருத வேண்டும்.
விஜயகாந்துக்கு எப்போதுமே வியாழக்கிழமை சென்டிமென்ட் அதிகம். வியாழக்கிழமையில முக்கியமான முடிவுகள் எதுவுமே எடுக்க மாட்டார் என்று தேமுதிக நிர்வாகிகள் கூறி வந்த நிலையில் வியாழக்கிழமையான நேற்றைய தினம் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
விஜயகாந்தின் இந்த அறிவிப்பு சிலருக்கு அதிர்ச்சியையும், பலருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றே கருதவேண்டும் எனவேதான் பலரும் கூகுளில் விஜயகாந்தை தேடியுள்ளனர்.
தமிழக அரசியலில் விஜயகாந்த் கரையேறுவாரா?அல்லது காணாமல் போவாரா? இன்னும் இரண்டு மாதங்களில் தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications