சென்னை சில்க்ஸ் தீ விபத்து.. நாசவேலை காரணமா ? நடவடிக்கை எடுக்க விஜயகாந்த் வலியுறுத்தல் !
சென்னை சில்க்ஸ் தீ விபத்தில் நாசவேலைக்கு காரணம் யார் என கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை: சென்னை சில்க்ஸ் தீ விபத்திற்கான உண்மைக் காரணம் என்ன என்பதை தமிழக அரசு உடனடியாக கண்டுபிடித்து, அதற்கான தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை தி.நகர் உள்ள உஸ்மான் ரோட்டில் இயங்கி வரும் தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் நேற்று மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து சென்னை மாநகரத்தையும், ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மிகப்பெரிய பல கட்டிடங்களும், பெரிய வியாபாரம் பகுதியாகவும், மிகுந்த மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக தி.நகர் அமைந்துள்ளது.
இந்த பகுதியில் அமைந்துள்ள தி சென்னை சில்க்ஸ் கட்டிடம் தீக்கு இரையாகி முற்றிலும் இடியக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இது இன்றைக்கு அனைவரையும் யோசிக்கவைக்கிறது. இந்த தீ விபத்துக்கு பின்னால் நடந்தது என்ன என்பதை நாம் அனைவரும் அறியும் வண்ணம் இந்த அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், உடனடியாக எடுக்க வேண்டும்.
இந்த விபத்து உண்மையிலையே தீ விபத்தால் ஏற்பட்ட நிகழ்வா அல்லது வியாபார ரீதியில் ஏற்பட்ட பொறாமையின் விளைவால் வேறுயாராவது இப்படிப்பட்ட நாச வேலைகளில் ஈடுபட்டுள்ளனரா என்பதையும் அல்லது தீ விபத்திற்கான உண்மைக்காரணம் என்ன என்பதை தமிழக அரசு உடனடியாக கண்டுபிடித்து, அதற்கான தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கட்டிடம் விதிமீறி கட்டப்பட்டிருந்தால் அதற்கான உரிய நடவடிக்கையை எடுத்து, இனிவரும் காலங்களில் விதிமுறைக்கு மீறாக எந்த கட்டிடமும் கட்டாத அளவிற்கு, கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி கொடுப்பதற்கு முன்பே சிந்தித்து செயல்படவேண்டும்.
வாங்கவேண்டிய லஞ்சத்தை வாங்கிக்கொண்டு விதிமுறைக்கு புறம்பாக கட்டிடம் கட்ட அங்கீகாரம் கொடுத்து கட்டிடத்தை கட்ட அனுமதி கொடுத்துவிடுகிறார்கள். பிறகு இதுபோன்று விளைவுகள் ஏற்படும்பொழுது அதனால் பாதிக்கபடுவது பொதுமக்களும், அந்த பகுதியில் உள்ளவர்களும் தான். ஆனால் இதுபோன்று சட்டத்திற்கு புறம்பாக லஞ்சம் வாங்கிக்கொண்டு செயல்படும் அதிகாரிகளுக்கு சம்மந்தமில்லாமல் போய்விடுகிறது.
மேலும் இந்த தீ விபத்து நடைபெற்ற பொழுது தமிழக அரசின் மெத்தனப்போக்கினால் ராட்சத கிரேன் உரிய நேரத்தில் வரவில்லை, தி அணைப்பு வாகனங்கில் தேவையான அளவிற்கு தண்ணீரும் இல்லை மற்றும் தீ அணைப்பு சார்ந்த தொழில்நுட்ப கருவிகள் மிகத்தாமதமாக வந்தன. இதனாலும் மிகப்பெரிய அளவில் தீ பரவுவதை தடுக்கமுடியாமல் போய்விட்டது. இதனால் தமிழக அரசு இதில் உறுதியான நடவடிக்கை எடுத்து மேற்படி நாசவேலைக்கு காரணம் யார் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் சென்னையில் இதுபோன்ற விபத்துக்கள் நடக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.