இயற்கையை அழித்ததன் விளைவே இந்த பாதிப்பு... ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்: விஜயகாந்த்
சென்னை: அதிமுகவும் திமுகவும் இயற்கை வளங்களை அழிப்பதில் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றன. தாது மணல், கிரானைட் போன்ற பல்வேறு இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இயற்கை வளங்களை மதிக்க தெரியாத அரசுக்கு இயற்கையே தண்டனை அளிக்கும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மழை, வெள்ள நிவாரணப்பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் அனகாபுத்தூர் பகுதியில் நிவாரணப்பணிகளை, விஜயகாந்த் பார்வையிட்டார். கழிவு நீர் ஓடும் சாலையில் வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு எம்.எல்.ஏக்களுடன் சென்று சேத பகுதிகளை பார்வையிட்ட விஜயகாந்த், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு நிவாரண உதவிகளை வழங்கினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இயற்கையை அழித்ததன் விளைவாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சென்னையில் பாதிப்பு
சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள வீடுகளில், மழைநீரும், கழிவு நீரும் உட்புகுந்து, வீட்டிற்குள் வசிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கி, போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ரூ. 5000 கோடி நிதி எங்கே போச்சு
ஒரே நாளில் 27 செ.மீ முதல் 33 செ.மீ வரை மழை பெய்துள்ளது. அதனால் பாதிப்பையும், சேதத்தையும் தவிர்க்க இயலவில்லை என்று முதலமைச்சர் கூறியுள்ளார். இதையேதான் 2005ல் 28 செ.மீ மழை பெய்தபோதும் கூறினார். கடந்த பத்தாண்டுகளாக மழைநீர் வடிவதற்கு தேவையான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா? சென்னையில் மழைநீர் வடிகால்கள் கட்டுமானத்திற்காக சுமார் ஐந்தாயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது என்னவானது?.

ஆக்கிரமிப்புகளே காரணம்
சென்னையில் மழைநீர் செல்லும் பெரும்பாலான நீர்வழிப்பாதைகள் அடைக்கப்பட்டுள்ளது. அதைக்கண்டும் காணாமல், நீர்வழிப்பாதையில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அரசு நிர்வாகம் அனுமதி அளித்ததும், மழைநீர் வடிகால்கள் முறையாக அமைக்க்கப்படாமல், தூர்வாரப்படாமல் இருப்பதும், சென்னையை சுற்றியுள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் தூர்வாரி, கரைகள் உயர்த்தப்படாமல் இருந்ததுமே இந்த பாதிப்புகளுக்கும், சேதங்களுக்கும் முழுமுதற்காரணமாகும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

போர்க்கால நடவடிக்கை தேவை
சட்டமன்றம் நடக்கும்போதெல்லாம் 110விதியின் கீழ் வெற்று அறிவிப்புகளை வெளியிடும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இயற்கை பேரிடர் பாதிப்புகளிலும் வெற்று அறிவிப்புகளை வெளியிடாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கும் வகையில், போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்பும் வகையில் நிவாரண பணிகளை துரித படுத்தவேண்டும் என்றும் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications