ஜெயலலிதா போல நடந்து நடித்து காட்டிய விஜயகாந்த்.... ஸ்டாலினை கடுமையாக திட்டி பிரச்சாரம்
சென்னை: ஜெயலலிதா எப்படி நடப்பார் என்று பிரச்சார மேடையில் நடித்து காட்டிய விஜயகாந்த், இவரை நம்பி நாம் ஓட்டு போட வேண்டுமா? என கேட்டார். பிள்ளைப் பிடிப்பவர்களையெல்லாம் சேர்த்துக்கொண்டிருப்பதாக ஸ்டாலினை குறிப்பிட்ட விஜயகாந்த், அவரது எண்ணமே அவரை அழித்து விடும் என்று கூறினார்.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், ''கொள்ளையடிப்பதில் அ.தி.மு.க., தி.மு.க. என இரண்டு கட்சிகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்று கூறினார்.
மேலும், மேடைகளில் ஜெயலலிதா இப்படி தான் நடப்பார், பேசுவார் என்று விஜயகாந்த் நடித்துக்காட்டினார். ''ஜெயலலிதா இப்படி தான் 2 ஸ்டெப் தான் நடப்பார் உடனே கையை உயர்த்தி இரட்டை இலையை காட்டிவிட்டு போய் உட்கார்ந்துவிடுவார்.
நின்னாதானே முடியும். இவர்களை நம்பி நாம் ஓட்டு போட வேண்டுமா? ஆனால், உங்களுக்காக நான். மக்களுக்காக நான் என்று சொல்வார். ஏன்னா, அது எல்லா சொத்தையும் கொள்ளை அடிச்சுட்டுபோறதுக்கு தான் என்றார் விஜயகாந்த்.
ஸ்டாலின் கெட்ட எண்ணம் கொண்டவர். அவரது எண்ணமே அவரை அழித்து விடும். பிள்ளை பிடிக்கிற கும்பல்களை எல்லாம் கட்சியில் ஸ்டாலின் சேர்த்துக்கொண்டுள்ளார் என்றும் விஜயகாந்த் கூறினார்.
விஜயகாந்த் நடப்பதையும், பேசுவதையும் வைத்து சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டலடித்து வரும் நிலையில் ஜெயலலிதா பேசுவதையும், நடப்பதையும் கிண்டலடித்துள்ளார் விஜயகாந்த்.
ஜெயலலிதா இதுவரை தனது பிரச்சாரத்தில் திமுகவிற்கு எதிரான விமர்சனத்தை மட்டுமே வைத்து வருகிறார். இதுவரை மக்கள் நலக்கூட்டணி, தேமுதிகவிற்கு எதிராக பேசவேயில்லை. இந்த நிலையில் விஜயகாந்த், தனது பிரச்சாரத்தில் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.