சட்டசபை கூட்டம்: நேற்று ஆப்சென்ட்டான விஜயகாந்த் இன்று பங்கேற்பாரா?
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் நேற்று அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்ற இருந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் மட்டும் கலந்து கொள்ளவில்லை. தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றாவது விஜயகாந்த் சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. 19 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

முதல் நாளான நேற்று மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.
முன்னதாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வென்றதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சபாநாயகர் தனபால் புகழாரம் சூட்டினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.
சட்டசபையில் நேற்று தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி என அனைத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.
ஆனால் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் மட்டும் கலந்து கொள்ளவில்லை. அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் பங்கேற்க முடியாது. அதே நேரத்தில் தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சபைக்கு வருகை தந்திருந்தனர்.
பிறந்த நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று விஜயகாந்த் கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று பிறந்த நாளை கொண்டாடும் விஜயகாந்த் சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications