ஐஸ்கிரீம் சாப்பிடப் போன விக்ரமின் மகள் விரலில் இருந்த வைர மோதிரம் அபேஸ்... !
சென்னை: ஐஸ்கிரீம் சாப்பிடச் சென்ற இடத்தில் நடிகர் விக்ரமின் மகள் விரலில் போட்டிருந்த வைர மோதிரத்தை யாரோ திருடி விட்டதாக போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
இந்தப் புகார் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நடிகர் விக்ரமுக்கு அக்ஷிதா என்ற மகள் உள்ளார். 22 வயதான இவருக்கு சமீபத்தில்தான் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்துவின் பேரனுக்கும், அக்ஷிதாவுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று அக்ஷிதா ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், ஆயிரம் விளக்கு, காதர் நவாஸ்கான் சாலையில் உள்ள பிரபல ஐஸ்கிரீம் கடைக்கு நான் ஐஸ்கிரீம் சாப்பிட சென்றிருந்தேன். ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு, வெளியில் வந்து பார்த்த போது, எனது விரலில் அணிந்து இருந்த வைர மோதிரத்தை காணவில்லை. யாரோ திருடி சென்றுவிட்டனர். மோதிரத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று புகாரில் கூறியிருந்தார் அக்ஷிதா.
ரூ. 12 லட்சம் மதிப்புள்ள அந்த வைர மோதிரம் திருடப்பட்டதா அல்லது தவறி எங்காவது விழுந்து விட்டதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட ஐஸ்கிரீம் கடையிலும் போலீஸார் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இருப்பினும் இதுவரை மோதிரம் கிடைக்கவில்லையாம்.












Click it and Unblock the Notifications