வெளிநாட்டினரைப் பிடித்து வைத்து சாலை வசதி கோரி போராட்டம் நடத்திய மேகமலை மக்கள்!
தேனி: தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் (மேகமலை) வசித்து வரும் மக்கள், தங்களது நீண்ட நாள் கோரிக்கையை அதிகாரிகள் உடனடியாக நிறைவேற்றக் கோரி இங்கிலாந்து மற்றும் அமெரிக்க சுற்றுலாப் பயணிகளைப் பிடித்து வைத்துப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். பொதுமக்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பிடித்து வைத்தால்தான் பிரச்சினை தீரும் என்ற எண்ணத்தில் இந்த சிறைபிடிப்பு நடந்ததால் சுற்றுலாத் தலமான ஹைவேவிஸ் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தோட்டங்கள் நிறைந்த ஹைவேவிஸ்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது மேகமலை. இதை ஹைவேவிஸ் என்றும் அழைப்பார்கள் பெரும்பாலும் இங்கு தேயிலைத் தோட்டங்கள்தான் உள்ளன. அனைத்தும் தனியார் தோட்டங்களாகும்.

ஐந்து கிராம மக்களின் தவிப்பு
இங்கு ஐந்து கிராமங்கள் உள்ளன. இங்கு வசித்து வரும் மக்களுக்கு சரியான சாலை வசதி இல்லை. இத்தனைக்கும் கிட்டத்தட்ட 48 கிலோமீட்டர் சாலையை தனியார் தேயிலைத் தோட்டங்கள், அரசிடம் ஒப்படைத்து பல ஆண்டுகளாகி விட்டன. ஆனாலும் அரசு ரோடு போடாமல் உள்ளது.

அரசு பஸ்கள் வர மறுப்பு
ரோடு மகா மோசமாக இருப்பதால் அரசு பஸ்கள் இப்பகுதியில் வரத் தயங்குகின்றன. இதனால் தனியார் பஸ் மட்டும் ஒன்று இயங்கி வருகிறது.

ஒரு வசதியும் கிடையாது
சரியான ரோடு இல்லை. மருத்துவ வசதி கிடையாது. ஆத்திர அவசரத்திற்கு ஒரு மருத்துவ வசதியும் இங்கு கிடையாது. இதனால் ஐந்து கிராம மக்களும் பெரும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

எத்தனை போராட்டங்கள்
அடிப்படை வசதிகள் கோரி இந்தப் பகுதி மக்கள் பல போராட்டங்களை நடத்திப் பார்த்து விட்டனர். ஆனாலும் பயன் இல்லை.

பிடிய்யா அந்த வெள்ளைக்காரங்களை
இந்த நிலையில் இங்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த 9 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். கடந்த 2 நாட்களாக இங்கு தங்கி சுற்றுலாவை அனுபவித்தனர். பார்த்தார்கள் மக்கள், இவர்களைப் பிடித்து வைத்து நமது கோரிக்கையை வலியுறுத்தலாம் என்று முடிவு செய்து 9 பேரையும் சிறை பிடித்தனர்.

விரைந்து வந்த போலீஸார்
இதுகுறித்த தகவல் மாவட்ட போலீஸ் எஸ்.பிக்குப் பறந்தது. அதிர்ந்து போன எஸ்.பி, உடனடியாக போலீஸ் படையை அனுப்பி வைத்தார். போலீஸார் விரைந்து வந்து கிராம மக்களுடன் பேசி வெளிநாட்டினரை மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

அதிகாரிகள் பேச்சு
அதன் பின்னர் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் கிராம மக்களுடன் பேசி அவர்களைச் சமாதானப்படுத்தினர்.
வெளிநாட்டினரை சிறை பிடித்து நடந்த போராட்டத்தால் ஹைவேவிஸ் மலையே அதிர்ந்து போனது.












Click it and Unblock the Notifications