ஓஎன்ஜிசி பணிகளுக்கு எதிர்ப்பு... கும்பகோணம் அருகே வீடுகளில் கருப்புக்கொடிக் கட்டி போராட்டம்
கும்பகோணம் அருகே ஓஎன்ஜிசி பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வீடுகளில் கறுப்புக்கொடிக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கும்பகோணம்: கதிராமங்களம் பகுதியில் ஓஎன்ஜிசி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி பணிகள் நடைபெற்று வருவதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வீடுகளில் கறுப்புக்கொடியைக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கதிராமங்களத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் பதித்துள்ள குழாய்களை அகற்றி மராமத்துப் பணிகளில் மேற்கொள்ள முயன்றது. இதற்கு கதிராமங்களம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மீத்தேன் மற்றும் ஷேல் கேஸ் எடுக்கும் பணிகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டிய கரிம மக்கள் பணிகளை செய்ய விடாமல் தடுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் பாதுகாப்போடு மராமத்து பணிகள் தொடங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து போலீசாரைக் கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஓஎன்ஜிசி பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போலீசாரைக் கண்டித்தும் கிராம மக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.