செவி சாய்க்காத அரசு.. அடிப்படை வசதி கேட்டு அயராமல் போராடும் அப்பாவி மக்கள்!
நெல்லை: நெல்லை மாவட்டம் சீவநல்லூர் அருகே திருவெற்றியூர் என்ற கிராம மக்கள் அடிப்படை வசதி கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.
தமிழகத்தில் இன்னும் அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்கள் ஏராளம். அதில் ஒன்றுதான் நெல்லை மாவட்டம் செங்கோட்டை ஒன்றியம் சீவ நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட திருவெற்றியூர் கிராமம்.

இவ்வூரில் அடிப்படை வசதிகள் கேட்டு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்கள் வசிக்கும் கிராமத்திற்கு சென்று வர பேருந்து வசதி இல்லை. போக்குவரத்து வசதி கேட்டும், தங்கள் பகுதியில் சுகாதார வளாகம் அமைக்கப்படாததாலும் பெண்கள், பெண் குழந்தைகள், ஆண்கள்உட்பட அனைவரும் திறந்த வெளியே உபயோகிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் குறை கூறுகிறார்கள்.

கழிப்பிட வசதி கேட்டும், ரேசன் கடை இல்லாததால் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ரேசன் பொருட்கள் வாங்க வேண்டிய சூழலால் ரேசன் கடை அமைத்து தர கோரியும், சமுதாய நலக்கூடம் கோரியும் பல முறை மனு செய்தும், மாதங்கள் கடந்தும் நடவடிக்கை இல்லை என்று கூறி கடந்த மாதம் செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

இருப்பினும் இதுவரை தீர்வு கிடைக்காமல் அரசு அதிகாரிகள் செவி சாய்க்காததால் அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுக்க இப்பகுதியினர் முடிவெடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications