தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றாத அதிகாரிகளை கண்டித்து பாடி, வில்லிவாக்கத்தில் மக்கள் சாலை மறியல்
கடலூர்: சென்னையில் வில்லிவாக்கம் மற்றும் பாடியில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து தேங்கியிருக்கும் மழை நீரை அகற்றாத அதிகாரிகளை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. சாலைகளில் இடுப்பளவும், சில இடங்களில் கழுத்தளவும் நீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் புகுந்து தேங்கியுள்ளது.

இந்நிலையில் வில்லிவாக்கம் சிட்கோ நகர், பாடி ஆகிய இடங்களில் தேங்கிய வெள்ள நீரை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் குதித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் சிறைவைப்பு
பண்ருட்டி அருகே உரிய நிவாரணம் கேட்டு மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் 4 கிராம நிர்வாக அதிகாரிகளை சிறை வைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கனமழையால் கடலூர் மாவட்டம் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியில் மழையால் பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை கணக்கிட்டு நிவாரணம் அளிக்குமாறு அதிகாரிகளுக்கு அதிமுக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து கீழ்இருப்பு தங்கமணி, மனம்தவிழ்ந்தபுத்தூர் முரளி, சிறுகிராமம் சின்னதுரை, நத்தம் சசிகுமார் ஆகிய 4 கிராம நிர்வாக அதிகாரிகள் திங்கட்கிழமை பண்ருட்டி அருகே உள்ள கீழ்இருப்பு கிராமத்திற்கு சென்றனர். மழையால் ஏற்பட்டுள்ள சேதத்தை கணக்கிட சென்ற அவர்கள் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டனர்.

சேத விவரங்களை கணக்கிட்ட அவர்கள் அங்குள்ள நூலகத்திற்கு காலை 10.30 மணிக்கு சென்றனர். அங்கு வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அளித்தனர். அருகில் உள்ள விசூர், பெரியகாட்டுப்பாளைய கிராம மக்களுக்கு எல்லாம் ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கு மட்டும் ஏன் ரூ.2 ஆயிரம் என்று கேட்டும், தங்களுக்கும் ரூ.5 ஆயிரம் அளிக்குமாறு கூறியும் மக்கள் அந்த 4 அதிகாரிகளை சிறைபிடித்தனர்.
பிற்பகல் 1.30 மணிவரை மக்கள் அதிகாரிகளை சிறைவைத்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மக்களை சமாதானம் செய்தனர். அவர்களுக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். அதன் பிறகே மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
பின்னர் நூலகத்தில் கூடியிருந்த 375 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications