விஜயகாந்துக்கு விழுப்புரம் கோர்ட் 'வார்னிங்'... ஆக. 16-ல் கண்டிப்பாக ஆஜராக உத்தரவு
விழுப்புரம்: முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் கண்டிப்பாக ஆக.16-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரத்தில் 2012-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில், அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதேபோல, 2014 பிப்ரவரி 2-ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மாநாட்டுக் கூட்டத்திலும், விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, அப்போது எம்எல்ஏக்களாக இருந்த பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர் தமிழக முதல்வரையும், அரசையும் விமர்சித்துப் பேசியதாக விழுப்புரம் அரசு வழக்கறிஞர் பொன்.சிவா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்குகளின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆஜராவதிலிருந்து விஜயகாந்த் உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு விலக்கு பெற்றனர். மேலும், உச்ச நீதிமன்றத்திலும் தடை ஆணை பெற்றனர்.
இதனால் வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வந்தது. கடந்த மாதம் 19-ந் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி சரோஜினிதேவி, வழக்கில் தொடர்புடைய விஜயகாந்த், பிரேமலதா, வெங்கடேசன், பார்த்தசாரதி ஆகியோர் ஜூலை 26-ந் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி 26-ந் தேதி பார்த்தசாரதி, வெங்கடேசன் மட்டுமே ஆஜராகினர்.
விஜயகாந்த், பிரேமலதா ஆஜராகவில்லை. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் அடுத்த விசாரணையின் போது கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன் மட்டும் ஆஜரானார். விஜயகாந்த், பிரேமலதா, பார்த்தசாரதி ஆகியோர் ஆஜராகவில்லை. இதுதொடர்பாக அவர்களது வழக்கறிஞர் பாலாஜி மனு கொடுத்தார்.
இதை விசாரித்த நீதிபதி சரோஜினிதேவி, கடந்த 2 வாரங்கள் அவகாசம் வழங்கியும் விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்டோர் ஏன் ஆஜராகவில்லை? நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும். முன்புதான் வருவதற்கில்லை என்று காரணம் கூறினார்கள், இப்போது என்ன செய்கின்றனர்? நீங்கள்தான் அவர்களை அழைத்து வந்து ஆஜர்படுத்தியிருக்க வேண்டும் என்று, அவரது வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.
வருகிற 16-ந் தேதி விஜயகாந்த், பிரேமலதா, பார்த்தசாரதி ஆகியோர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். அன்றைய தினம் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றது தொடர்பான ஆவணங்களின் நகலை அவர்கள் வழங்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications