வைகோவுக்கு விருதுநகர்தான் சாதகமான தொகுதி - 'ஒன்இந்தியா' வாசகர்கள் கருத்து
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு விருதுநகர்தான் போட்டியிட சாதகமான தொகுதி என்று ஒன்இந்தியா- தமிழ் வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு விருதுநகரில் போட்டியிட்டால்தான் வைகோவுக்கு சாதகமாக இருக்க முடியும் என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
வைகோ, தேனி தொகுதியில் போட்டியிட பரிசீலித்து வருவதாக வந்த தகவல்களின் பின்னணியில் வாசகர்களின் கருத்து விருதுநகராக அமைந்துள்ளது.
வைகோவுக்கு எந்தத் தொகுதி சாதகமாக இருக்கும்?
வைகோவுக்கு எந்தத் தொகுதி சாதகமாக இருக்கும் என்ற கேள்விக்கு மொத்தம் 20,987 பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
விருதுநகர்தான்
விருதுநகர்தான் பொருத்தமான, சாதகமான தொகுதி என்று 32 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது 6783 வாக்குகள் விருதுநகருக்கு ஆதரவாக பதிவாகியுள்ளது.
தேனிதான் சரியான 'சாய்ஸ்'
தேனிதான் சரியான சாய்ஸ் ஆக இருக்க முடியும் என்பது 13 சதவீதம் பேரின் கருத்தாகும். அதாவது 2741 வாக்குகள் அதற்கு ஆதரவாக கிடைத்துள்ளன.
தமிழகத்தில் எங்கு நின்றாலும் அவரால் வெல்ல முடியும்
தமிழகத்தில் எங்கு நின்றாலும் வைகோவால் வெல்ல முடியும் என்பது 24 சதவீதம் பேரின் கருத்தாகும். இந்தக் கருத்துக்கு ஆதரவாக பதிவான வாக்குகள் 5030 ஆகும்.
'சதி'காரர்கள் இருக்கும் வரை எங்குமே ஜெயிக்க முடியாது
அதேசமயம், 2வது அதிகபட்ச ஆதரவு இந்த கருத்துக்குக் கிடைத்துள்ளது. சதிகாரர்கள் இருக்கும் வரை வைகோவால் எங்குமே ஜெயிக்க முடியாது என்பது இந்தக் கருத்தாகும். இதற்கு 31 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மொத்த வாக்குகள் 6433 ஆகும்.
கடந்த தேர்தலில்
கடந்த லோக்சபா தேர்தலில் மயிரிழையில் வைகோ வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார். அவரது தோல்வியில் சில சதிகள் அடங்கியிருந்ததாக அப்போதே சர்ச்சை வெடித்தது நினைவிருக்கலாம்.
3 முறை ராஜ்யசபா எம்.பி.
வைகோ 1978 முதல் 1996 வரை 3 முறை ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
2 முறை லோக்சபாவுக்கு
2 முறை லோக்சபா எம்.பியாக அவர் இருந்துள்ளார். 1998ம் ஆண்டு 12வது லோக்சபாவிலும், 1999ல் 13வது லோக்சபாவிலும் அவர் எம்.பியாக இருந்துள்ளார்.
2004க்குப் பிறகு
1999 முதல் 2004ம் வரை எம்.பியாக இருந்த வைகோ அதன் பிறகு நாடாளுமன்றமே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முறை அவர் நிச்சயம் எம்.பியாகி நாடாளுமன்றம் செல்வார் என்ற நம்பிக்கை மதிமுகவினர் மத்தியில் பலமாக உள்ளது.