கமல் என்ன சொன்னார்னும் தெரியாது... ஓபிஎஸ் அறிக்கையையும் நான் பார்க்கல! - விஷாலின் பலே பதில்!
தமிழக அரசு பற்றி கமல் ஹாஸன் என்ன சொன்னார் என்பதும், அதற்கு அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் என்ன பதிலளித்தார் என்பதையும் நான் பார்க்கவே இல்லை என்று நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் கூறியுள்ளார்.
ராஜபாளையத்தில் நடக்கும் ‘மருது' படப்பிடிப்பில் பங்கேற்ற விஷால் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
அரசுக்கு அட்வைஸ்
மழையால் சென்னை உள்ளிட்ட பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் வடக்கு சென்னை பகுதி அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மீட்பு குழு உருவாக்கி அனைத்து நடிகர்களும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டோம். இதன் ஒருபகுதியாக சென்னை மற்றும் கடலூருக்கு நேற்று 100 வாகனங்களில் நிவாரணப் பொருட்களை அனுப்பி உள்ளோம். தற்போது ஏற்பட்ட வெள்ள பாதிப்பை எடுத்துக்காட்டாக கொண்டு இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் அரசு செயல்பட வேண்டும்.
உதவுங்கள்
அனைத்து பகுதிக்கும் உணவு உள்ளிட்ட பொருட்கள் தற்போது அனுப்பப்பட்டு வருகின்றன. ஆனால் அனைத்து மக்களையும் திரும்ப குடியமர்த்துவது என்பது சிரமமான காரியம். சென்னை நிவாரணப் பணிகளில் பொதுமக்களின் ஈடுபாடு அதிகம். சிறு குழந்தைகள் உட்பட அதிகமானோர் தவித்து வருகின்றனர். அதிகமானோர் உதவிகளை செய்துள்ளனர். உதவி செய்யாதவர்கள் தயவு செய்து உதவ வேண்டும். உங்களால் முடிந்ததை அதிகமான பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு தயவு செய்து உதவி செய்ய வேண்டும். இதை நான் நடிகனாக கேட்கவில்லை. ஒரு மனிதனாக கேட்கிறேன்.
சவாலான பணி
ராணுவம் சவாலான பணிகளை மேற்கொண்டு வருகிறது. நடிகர் ராஜ்கிரண் 2 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்டுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெலுங்கு, மலையாளம், கன்னட திரைப்பட நடிகர்கள் மிகுந்த உதவி செய்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். எனது ரசிகர் மன்ற இளைஞர்கள் மீட்பு பணியில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
ரூ 70 லட்சம்
நடிகர் சங்கம் சார்பில் மீட்பு பணிகளுக்காக 70 லட்ச ரூபாய் வரை முதல் அமைச்சரின் பொதுமக்கள் நிவாரண நிதியாக அளிக்கப்பட்டுள்ளது.
சிசிஎல் கிரிக்கெட் மூலம்
அடுத்ததாக சி.சி.எல். கிரிக்கெட் தொடர் வரவிருப்பதால் நிவாரணப் பணிக்காக ஸ்டார் நைட் போன்ற நிகழ்ச்சி நடத்தும் எண்ணம் இல்லை. முதல்வர் நிதிக்கு அளித்தது போக மக்களுக்கு போய் சேரும் வகையில் நடிகர் சங்கம் சார்பில் நிவாரண உதவி அளிக்கப்படும்.
எனக்குத் தெரியாதே....
வெள்ளச் சேதம் குறித்து நடிகர் கமலஹாசன் தெரிவித்த கருத்துக்கள் குறித்த தகவலை நான் பார்க்கவில்லை. அதற்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த பதில் அறிக்கையையும் படிக்கவில்லை. அதுபற்றி எனக்கு தெரியாது. அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் குறித்து நான் எதுவும் சொல்வதற்கில்லை," என்றார்.