தயாரிப்பாளர் சங்கம் இப்படி ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்கலாமா? - விஷால்
சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சரத்குமார் அணிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்கலாமா? இதில் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் உடன்பாடா? என கேள்வி எழுப்பியுள்ளார் விஷால்.
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தலை முன்னிட்டு செய்தியாளர்களிடம் விஷால் கூறியதாவது:
சமரசம் எனும் பெயரில் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவு வருத்தமளிக்கவில்லை. ஆனால், தேர்தலில் போட்டி வேண்டாம், சரத்குமார் தரப்பினரே பொறுப்பில் நீடிக்கட்டும் என்பதுபோல, தயாரிப்பாளர் சங்கம் சமரசம் பேச வந்த முறையைத்தான் ஏற்கவில்லை.

தயாரிப்பாளர் சங்கத்திலும் நடிகர், நடிகைகள் பலர் உறுப்பினர்கள்தான். ஆகவே அச் சங்கத் தலைவர் தாணு ஒருதலைப்பட்சமாக செயல்படுவது சரியல்ல. நீதிமன்றக் கருத்தின் அடிப்படையிலேயே சரத்குமார் மீது நாங்கள் குற்றஞ்சாட்டுகிறோம். ஆகவே அவர் எங்கள் மீது வழக்குத் தொடுப்பதில் அர்த்தமில்லை. நாங்கள் உண்மையைக் கூறி வரும் நிலையில், கண்டன சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களை இன்னும் அதிகமாக வெளிப்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா நடிகர், நடிகைகளுக்கு பல நன்மைகளைச் செய்து வருகிறார். ஆகவே சங்கத் தேர்தலில் அவரது பெயரை தவறாகப் பயன்படுத்த வேண்டாம். முதல்வர் குறித்து நாங்கள் எந்தக் கருத்தும் கூறவில்லை.
சமரசத்துக்கு தயாரிப்பாளர் உள்ளிட்ட பல சங்கங்கள் எங்களை அழைத்தன. ஆகவே எந்தச் சங்கம் அழைத்தாலும் சமரசம் கிடையாது என்றுதான் கூறினோம். அதைத் திரித்து முதல்வர் பெயரைப் பயன்படுத்துகிறார்கள். முதல்வருக்கு இதெல்லாம் தெரியும். நடிகர் உதயநிதி ஸ்டாலின் எங்களுக்கு நிதியுதவி அளித்தார் என்பதும் கட்டுக்கதை.
மதுரை நாடகர் நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்ட அதன் தலைவர், துணைத் தலைவர் கேட்டதற்கிணங்க முதல் தவணையாக ரூ.5 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. நாடக நடிகர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து திரைப்படத்தில் அவர்களுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்படும்," என்றார்.












Click it and Unblock the Notifications