விஷ்ணுபிரசாத் நீக்கத்திற்கு எதிர்ப்பு... வேலூரில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவபொம்மை எரிப்பு
வேலூர்: முன்னால் காங்கிரஸ் எம்எல்ஏ விஷ்ணுபிரசாத்தை கட்சியை விட்டு நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் மாவட்டத்தில் விஷ்ணு பிரசாத் ஆதரவாளர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவனின் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் விஷ்ணு பிரசாத். சில நாட்களுக்கு முன், 'என் தோல்விக்கு திமுகவினர், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ஆகியோர்தான் காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார் விஷ்ணு பிரசாத். தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் பதவியில் இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவனை நீக்கவேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதனால், விஷ்ணு பிரசாத் மீது கோபமடைந்த இளங்கோவன், விஷ்ணுபிரசாத்தை கட்சியை விட்டு நீக்கி, அதிரடி உத்தரவை பிறப்பித்தார். தமிழக காங்கிரஸின் தேர்தல் அணுகுமுறைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறுகளை பரப்புகிற நோக்கத்தில் வெளிப்படையாக கருத்துகள் கூறியிருப்பதை கட்சி விரோத நடவடிக்கையாக கருதுவதால் அவர் நீக்கப்படுகிறார் என இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய விஷ்ணுபிரசாத், என்னை கட்சியை விட்டு நீக்க இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார். நான், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர். அதனால், என்னை மாநிலத் தலைமை நீக்க முடியாது என்றும் அவர் கூறினார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸின் மைத்துனருமாவார்.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் திரண்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஷ்ணுபிரசாத் ஆதரவாளர்கள், ஈவிகேஎஸ் இளங்கோவனின் உருவபொம்மையை எரித்தனர். அப்போது, விஷ்னுபிரசாத்தை கட்சியில் இருந்து நீக்கியதை கண்டித்து இளங்கோவனுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர்.
அதிமுகவினர்தான் ஈவிகேஎஸ் இளங்கோவனின் உருவபொம்மையை அடிக்கடி எரிப்பார்கள். இப்போது சொந்த கட்சிக்காரர்களே இளங்கோவனின் உருவபொம்மையை எரிக்க ஆரம்பித்து விட்டனர்.