பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் தற்காலிக வாபஸ்!
சென்னை: தமிழக அரசு உறுதியளித்ததையடுத்து, பார்வையற்ற பட்டதாரிகள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தேர்ச்சிக்கான மதிப்பெண்களை 40 சதவீதம் குறைவாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் கடந்த 12 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். சென்னை சேத்துப்பட்டு ரயில் முன்பு இன்று பார்வையற்ற பட்டதாரிகள் மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு பல்வேறு அமைப்பினரும் அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே, ராயப்பேட்டை மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம் போராட்டமும் நடத்தி வந்தனர். அவர்களை இன்று அமைச்சர் வளர்மதி நேரில் சந்தித்து, மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.
இதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக மாற்றுத்திறனாளிகள் அறிவித்துள்ளனர்.