விதியும், சதியும் செய்த சூழ்ச்சியால் நடக்கும் இடைத்தேர்தலில் என்னை வெற்றி பெற செய்யுங்கள்: ஜெ.
சென்னை: விதியும், சதியும் செய்த சூழ்ச்சியால் நடக்கும் இந்த இடைத்தேர்தலில் உங்கள் சகோதரியான என்னை மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே. நகர் தொகுதி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
என் அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களே. உங்கள் வேட்பாளராக, அ.தி.மு.க. சார்பில் இந்த இடைத்தேர்தலில் உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் போட்டியிடுகிறேன்.

சகோதரி
எப்பொழுதும் என் மீது எல்லையில்லாத அன்பும், அக்கறையும் கொண்டிருக்கும் நீங்கள் அனைவரும் 27-6-2015 அன்று நடைபெற உள்ள இடைத் தேர்தலில், கழகத்தின் வெற்றிச் சின்னமாம் ‘‘இரட்டை இலை'' சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சதி
எனக்கு எதிராக பின்னப்படுகின்ற அரசியல் சதி வலைகளையும், என் மீது நடத்தப்படுகின்ற எண்ணற்ற தாக்குதல்களையும் நன்கு அறிந்து வைத்திருக்கும் வாக்காளப் பெருமக்களாகிய உங்களுக்கு, விதியும், சதியும் செய்த சூழ்ச்சியால் இந்த இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்பது தெரியாதது அல்ல.

எம்.ஜி.ஆர்.
அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட நான், தமிழக மக்களுக்காகவே என் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறேன் என்ற காரணத்தாலேயே, அரசியலுக்குள் நுழைந்த நாளில் இருந்து தொடர்ந்து எனக்கு எதிராக சொல்லொண்ணா வேதனை தரும் பல கொடுஞ்செயல்களை எனது அரசியல் எதிரிகள் செய்த வண்ணம் உள்ளனர்.

பாசம்
என் மீது நீங்களும், உங்கள் மீது நானும் கொண்டிருக்கும் பற்றும், பாசமும் தான் தொடர்ந்து என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த அன்பின் காரணமாகத் தான் மீண்டும் மீண்டும் நான் மக்களிடம் வருகிறேன்; அவர்களின் அன்பைப் பெறுகிறேன்.

திட்டங்கள்
தமிழக மக்களுக்கு நாடே போற்றும் நல்ல பல திட்டங்களை உங்கள் அன்புச் சகோதரியாம் எனது தலைமையிலான அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருவதை நீங்கள் அறிவீர்கள். ஏழை, எளிய, ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்வில் வசந்தம் வீசிடச் செய்ய வேண்டும் என்ற லட்சியத்திற்காகத் தான் நான் அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

இரட்டை இலை
எம்.ஜி.ஆர். நமக்காக வகுத்துத்தந்த அரசியல் பாதையில் நாம் இன்னும் பல வெற்றிகளைப் பெற்று தமிழகத்தை இந்தியாவின் முன்னோடி மாநிலமாக மாற்ற இந்த இடைத்தேர்தலில் எனக்கு உங்கள் பொன்னான வாக்குகளை ‘‘இரட்டை இலை'' சின்னத்தில் அளித்து, என்னை மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

மகிழ்ச்சி
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களாகிய உங்களை எல்லாம் 22-6-2015 அன்று பல்வேறு இடங்களில் நான் நேரில் சந்தித்து வாக்கு கேட்டபோது, நீங்கள் எனக்கு அளித்த உற்சாக வரவேற்பையும், உளப்பூர்வமான ஆதரவையும் கண்டு உள்ளபடியே நான் பெருமகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைகிறேன்; உங்களுக்கு நன்றி கூறி மகிழ்கிறேன்.

வெற்றி
எனது அருமை வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் அனைவரும், வாக்குப் பதிவு நாளான 27-6-2015 அன்று (நாளை) காலையிலேயே வாக்குச் சாவடிக்குச் சென்று எம்.ஜி.ஆர். தந்த வெற்றிச் சின்னமாம் ‘‘இரட்டை இலை'' சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை அளித்து, என்னை மகத்தான வெற்றி பெறச் செய்திட வேண்டும் என்று உங்கள் அனைவரையும் மீண்டும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications