தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன்.. ஒரே போடாக போட்ட கமல்ஹாசன்
சென்னை: தாம் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன் எனவும் நடிகர் கமல்ஹாசன் அதிரடியாக கூறியுள்ளார்.
இந்தியா டுடே டிவி சேனலுக்கு நடிகர் கமல்ஹாசன் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளதாவது: அரசியலுக்குள் நுழைவது என்பது முள் கிரீடத்தை தலையில் சுமப்பதற்கு சமமானது.
மக்களைப் பொருத்தவரை அவர்களின் பிரச்னைகளை யாரும் கண்டு கொள்வதில்லை என்றே நினைக்கின்றனர். இடது சாரியா, வலது சாரியா அல்லது வேறு சிந்தனையுடையவனா என்பதையெல்லாம் மக்கள் பார்க்கவில்லை.

கருப்பு தான் என் நிறம்
என்னைப் பொருத்தவரை கருப்பு தான் என்னுடைய நிறம். அதில் தான் காவி உட்பட அனைத்து நிறங்களும் உள்ளன. அரசியல் ஒரு புதைகுழி என்பதை மாற்றி அனைவருக்குமானதாக மாற்ற வேண்டும் என்பதே இப்போதைய தேவையாக உள்ளது.

மக்களை நோக்கி பயணம்
அரசியல்வாதி ஆவதற்கு முன்னர் என்னை நான் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக மக்களை நேரில் சந்திக்க உள்ளேன், என்னுடைய மக்கள் சந்திப்பு பயணத்தை விரைவில் அறிவிப்பேன்.

மாற்றத்திற்கு தலை வணங்குகிறேன்
உடனடியாக எந்த மாற்றத்தையும் செய்து விடுவேன் என்று நான் உறுதியளிக்கவில்லை. ஆனால் மாற்றத்திற்காக நான் தலைவணங்கத் தயாராக இருக்கிறேன் என்பதையே சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
|
மக்கள் ஒத்துழைப்பு
இதே போன்று டைம்ஸ் நவ் டிவி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் நடிகர் கமல் கூறியதாவது: மக்களின் ஒத்துழைப்பு இன்றி எதையுமே செய்ய முடியாது, ஏன் நான் அவர்களுக்காக உதவ நினைப்பதில் பாதியைக் கூட நிறைவேற்ற முடியாது. என்னைப் பொறுத்தவரையில் நான் பகுத்தறிவாளன்.

மக்களுக்கு உதவும் கருவி
கடவுள் இருக்கிறாரோ இல்லையோ இது எல்லாவற்றையும் விட நான் மக்களின் அன்பை மதிக்கிறேன். நான் மக்களுக்கு உதவுவதற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கீழே இறங்கிச் செல்லத் தயாராக இருக்கிறேன். நான் மக்களுக்காக உதவும் ஒரு கருவி அதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications