வைகுண்டராஜன் முன் ஜாமீன் மனு தள்ளுபடி: சிபிஐ கைது செய்ய வாய்ப்பு
மதுரை: விவி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன் மீது 2012ம் ஆண்டு சி.பி.ஐ பதிவு செய்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து எந்த நேரத்திலும் அவர் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக்குழு தலைவராக 30.4.2007 முதல் 30.4.2012 வரை இருந்தவர் சுப்பையா. இவர் தாய் ஜானகி, சகோதரர் ஜெயராமன் ஆகியோருடன் சேர்ந்து ரூ.8 கோடியே 23 லட்சத்து 93 ஆயிரத்து 501 அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், இதற்கு விவி மினரல்ஸ் நிறுவன பங்கு தாரர்களான வைகுண்டராஜன், இவரது சகோதரர் ஜெகதீசன் ஆகியோர் உதவியதாகவும் சிபிஐயின் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2012ல் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் வைகுண்டராஜன் மற்றும் அவரது சகோதரர் ஜெகதீசன் உள்பட 8 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு விசாரணை நடத்தி வந்தது.
இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி, வைகுண்டராஜன், ஜெகதீசன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன் நவம்பர் 6ஆம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமி நாதன் ஆஜராகி, சிபிஐ இன்ஸ்பெக்டர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்தார்.
பண பரிவர்த்தனை
அந்த மனுவில், துறைமுக பொறுப்புக் குழு தலைவராக இருந்த சுப்பையா மற்றும் அவரது குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கியுள்ளனர். இதற்கு வைகுண்டராஜன் மற்றும் ஜெகதீசன் துணையாக இருந்துள்ளனர். நவம்பர் 2008 முதல் நவம்பர் 2011 வரை காஞ்சிபுரம் ஐசிஐசிஐ வங்கி மூலம் இருவரும் சுப்பையாவின் தாய் ஜானகி மற்றும் ஜெயராம் ஆகியோருக்கு ரூ.7.5 கோடி பரிவர்த்தனை செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கரிசல்குளத்தில் நிலம் வாங்கிய வகையில் இருவரும் பணம் கொடுத்துள்ளனர்.
துறைமுக பொறுப்பு தலைவர்
இந்த இருவருக்கும் தூத்துக்குடி துறைமுகத்தில் வர்த்தக பரிவர்த்தனை உள்ளது. சம்பந்தப்பட்ட காலத்தில் சுப்பையா தலைவராக இருந்துள்ளார். நில விற்பனை மற்றும் வங்கி செக் ஆகியவற்றில் இருவரின் கையெழுத்தும் வேறுபடுகிறது.
ஏமாற்று வேலை
செக் மூலம் வெளிப்படையாக பண பரிவர்த்தனை நடந்தது என்பது ஏமாற்று வேலை. உண்மையை மறைக்கும் விதமாக போலியான சொத்து பரிமாற்றம் மூலம் பண பரிவர்த்தனை நடந்துள்ளது. எனவே இவர்களை காவலில் விசாரிக்க வேண்டியது அவசியம். எங்களிடம் சில ஆவணங்கள் உள்ளன. அதன்படி அவர்களிடம் விசாரிக்க வேண்டி உள்ளது. அப்போதுதான் விசாரணையை முழுமையாக தொடர முடியும்.
முன் ஜாமீன் வழங்கக் கூடாது
இருவரும் சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்கள். முன் ஜாமீன் வழங்கினால் ஆவணங்களும் சாட்சிகளும் கலைக்கப்படலாம். எனவே இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க கூடாது. இவ்வாறு கூறப்பட்டிருந்தது. இதையடுத்து மனு மீது இன்று (நவம்பர் 7)உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
மனு தள்ளுபடி
இந்த மனு இன்று (7ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், வைகுண்டராஜன் மற்றும் அவரது சகோதரர் ஜெகதீசன் ஆகியோரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் எந்தநேரத்திலும் வைகுண்டராஜன் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
வைகுண்டராஜனின் தில்லாலங்கடி
விருதுநகர் மாவட்டம் கரிசல்குளத்தில் உள்ள ஒரு நிலத்தை சுப்பையாவுக்கு விற்க வைகுண்டராஜன் ஒரு ஒப்பந்தம் போடுகிறார். இதற்காக கொஞ்சம் பணத்தை அட்வான்சாக தருகிறார் சுப்பையா. பின்னர் ஒப்பந்தத்தில் பிரச்சனை வந்ததாகக் கூறி அந்த நிலம் தனக்கு தேவையில்லை என்று கூறி விடுகிறார் சுப்பையா.
இதையடுத்து ஒரு பெரும் தொகையை வைகுண்டராஜன் திருப்பித் தருகிறார். அதாவது அட்வான்ஸ் பணத்துக்கு வட்டி போட்டு தந்ததாகக் கூறி ரூ. 8.23 கோடி பணத்தைத் தருகிறார். இத்தனைக்கும் அந்த நிலத்தின் மொத்த மதிப்பே மிக மிகக் குறைவு தான்.
குட்டி போட்ட வட்டி
வைகுண்டராஜனின் தாது மணல் ஏற்றுமதி தூத்துக்குடி துறைமுகம் வழியாக நடந்து வரும் நிலையில், சுப்பையாவின் அட்வான்ஸ் பணத்துக்கு வட்டி என்ற பெயரில் குட்டியை பெருமளவில் போட்டு பணம் தந்துள்ளனர் வைகுண்டராஜன் அண்ட் கோ. இது சுப்பையாவுக்கு தரப்பட்ட லஞ்சமாக சிபிஐ நினைக்கிறது. நேரடியாக பணம் தந்தால் அதை வரவு வைப்பதில் சுப்பையாவுக்கு பிரச்சனை வரும் என்பதால் இந்த நிலம், வட்டி என்ன தில்லாலங்கடி வேலையில் சுப்பையாவும் வைகுண்டராஜன் தரப்பும் இறங்கியதாக சிபிஐ நினைக்கிறது.
கைதாக வாய்ப்பு
இதில்தான் வைகுண்டராஜனையும் அவரது தம்பியையும் விசாரணைக்கு அழைக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. விசாரணைக்குப் போகும் இடத்தில் அப்படியே கைது செய்து கொண்டு போய்விடுவார்கள் என்பதால் வைகுண்டராஜனும் அவரது தம்பியும் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் விரைவில் வைகுண்டராஜனும் அவரது சகோதரரும் சிபிஐயால் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.