நல்ல நிர்வாகியா? ரப்பர் ஸ்டாம்பா? புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆவேசம்
புதுவை முதல்வர் நாரயணசாமியின் குற்றச்சாட்டு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி.
புதுச்சேரி: நல்ல நிர்வாகியா இருக்க வேண்டுமா? அல்லது ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டுமா? என்று புதுச்சேரி முதல்வர் நாரயணசாமியின் குற்றச்சாட்டுக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றது முதல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பரபரப்புக்கு பஞ்சம் வைக்காமல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
கிரண்பேடியின் அதிரடி நடவடிக்கைகளால் ஆளும் கட்சியான காங்கிரஸ் அதிர்ந்து போயுள்ளது. இதனிடையே முதல்வர் நாரயணசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் ஆளுநர் கிரண்பேடி. முதல்வர் - ஆளுநருக்கிடையேயான அதிகார மோதல் மேலும் மேலும் வலுத்து வருகிறது. இதனால் புதுச்சேரி மாநிலத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
மேலும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 'தான் ஒரு துணை நிலை ஆளுநர் என்பதை மறந்து தரம் தாழ்ந்து கிரண்பேடி செயல்படுகிறார்' என்று ஆவேசமாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள கிரண்பேடி, நல்ல நிர்வாகியாக இருக்க வேண்டுமா? அல்லது ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மக்கள் நீதி வேண்டி கண்ணீர் வடிப்பதால் நிர்வாகியாக உதவ வேண்டியது அவசியானது என்றும் முதல்வரும், ஆளுநரும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார்.