ஒரு ரூபாய் கூட இல்லாமல் கேஸ் சிலிண்டர் வாங்க வேண்டுமா? உடனே விண்ணப்பிக்க அழைப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா கியாஸ் சிலிண்டர் பெற விண்ணப்பிக்கலாம் என அந்த மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். இந்த உஜ்வாலா இலவச கேஸ் இணைப்பு பெற என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா" என்ற பெயரில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட விலையில்லா கேஸ் சிலிண்டர் திட்டம் ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ள திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு கேஸ் அடுப்பும், சிலிண்டரும் முதல் முதலில் இலவசமாக வழங்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட அளவிலான உஜ்வாலா கமிட்டி கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலெக்டர் ரம்யா மெர்சி கூறுகையில், "ஏழை, எளிய பொது மக்களுக்காக எண்ணற்றத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் உஜ்வாலா திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப பெண்களுக்கு முன்வைப்பு தொகை இன்றி, எரிவாயு உருளை, எரிவாயு அடுப்பு உள்ளிட்டவைகள் விலையின்றி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் பொதுமக்கள் அருகிலுள்ள சமையல் எரிவாயு உருளை வழங்கும் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் கமிட்டி உறுப்பினர்கள் பொது மக்களிடையே இத்திட்டம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும், பயனாளிகள் சேர்க்கை விவரம் குறித்து அறிக்கையை ஒவ்வொரு வாரமும் சமர்ப்பித்திட வேண்டும் என அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் மாவட்ட பிரதிநிதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த விலையில்லா கேஸ் இணைப்பு (உஜ்வாலா இணைப்பு) பெற என்ன செய்ய வேண்டும்? 18 வயது நிறைவடைந்தவர்கள், ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை, சேமிப்பு கணக்கு பாஸ்புக் அல்லது வங்கி கணக்கு அறிக்கை, இருப்பிட சான்று (தொலைபேசி/ மின்சாரம்/ தண்ணீர் அல்லது தொலைபேசி கட்டணம்/வீடு பதிவு ஆவணம்)பிபிஎல் (வறுமைக் கோட்டிற்கு கீழே) ரேஷன் கார்டு, பஞ்சாயத்து பிரதானால் அங்கீகரிக்கப்பட்ட பிபிஎல் சான்றிதழ், சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்றவற்றுடன், இன்டேன், பாரத் கேஸ் அல்லது இந்துஸ்தான் பெட்ரோலியம் என ஏதாவது ஒரு பொதுத்துறை கேஸ் விற்பனை நிலையத்திற்கு செல்லுங்கள்.. அங்கு விவரங்களை கொடுத்தால் உங்கள் விண்ணப்பத்தை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார்கள்.
இதற்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். https://www.pmuy.gov.in/index.aspx இணையதளத்துக்கு சென்று இன்டேன், பாரத் கேஸ் அல்லது இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு சிலிண்டரை தேர்வு செய்து விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பம் சரிபார்க்கப்பட்ட பின் உங்களுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்குவார்கள்.
உஜ்வாலா இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர்களுக்கு கணிசமாக மானியம் வழங்கப்படுகிறது. உஜ்வாலா திட்டம் நாடு முழுவதும் 9 கோடியே 60 லட்சம் பேர் சிலிண்டர் பெற்று வருகின்றனர். அவர்களுக்கு 14.2 கிலோ கிராம் எடை கொண்ட சிலிண்டர் வழக்கமான விலையில் இருந்து ரூ.300 மானியம் அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications