காவிரிப் பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது... !
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து இன்று மாலை தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 110 அடியாக உயர்ந்துள்ளது. காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள், சம்பா நெல் சாகுபடியை மேற்கொள்ள ஏதுவாக மேட்டூர் அணையில் அப்போதிருந்த நீர் இருப்பையும், நீர் வரத்தையும் கருத்தில் கொண்டு வரும் 15-ஆம் தேதி முதல் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து அதிக அளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டதால், கடந்த மூன்று நாள்களுக்குள் சுமார் 12.40 டி.எம்.சி. நீர் மேட்டூர் அணைக்கு கிடைத்துள்ளது. சனிக்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர் மட்டம் 103.10 அடியாக இருந்தது. நீர்வரத்து நொடிக்கு சுமார் 90 ஆயிரம் கன அடி என்ற அளவில் வந்து கொண்டிருந்தது. மேலும், அணைக்கு இதே அளவு நீர் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது. இப்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்கட்டமாக நொடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் ஞாயிற்றுக்கிழமை முதலே தண்ணீர் திறந்து விட ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி மேட்டூர் அணை இன்று மாலை 4 மணிக்கு பாசனத்திற்காகத் திறந்து விடப்பட்டது.
நீர் திறந்து விடும் நிகழ்ச்சி பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடந்தது.
நீர்மட்டம் 110 அடியாக உயர்வு
இதற்கிடையே, இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 110 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 89,726 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்இருப்பு 7 டி.எம்.சி.,க்கும் அதிகமாக உயர்ந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு நாட்களில் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications