மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது!
மேட்டூர்: கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது.
காவிரி டெல்டா பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால் கடந்த 3 ஆண்டுகாலமாக போதுமான நீர் இருப்பு இல்லாததால் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதில்லை.
இதனால் 3 ஆண்டுகாலமாக குறுவை சாகுபடி பொய்த்துப் போயிருக்கிறது. இந்த நிலையில் கேரளாவின் வயநாட்டில் பெய்த கனமழையால் கர்நாடகாவின் கபினி அணை நிரம்பியுள்ளது.
இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கபினி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு அது மேட்டூருக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று காலை 8 மணிக்கு 5 ஆயிரத்து 823 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 8 மணிக்கு 6 ஆயிரத்து 226 கன அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் 44.26 அடியாக உள்ளது.
இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44.25 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்துள்ளது.