கனமழை காரணமாக முல்லை பெரியாறில் நீர்மட்டம் உயர்வு... தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!
சென்னை: கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று ஒரேநாளில் 3 அடி உயர்ந்துள்ளது. இதனால், தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதற்கு கேரளா தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, அக்னி தொடங்கி விட்டது வெயில் வாட்டி வதைக்கும் என அச்சத்தில் இருந்த மக்களை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை குளிர வைத்து இருக்கிறது.
கனமழை...
இந்நிலையில், கனமழை காரணமாக நேற்று ஒரேநாளில் மட்டும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்திருப்பது தமிழக விவசாயிகளை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஒரே நாளில்...
கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. இதனால், நேற்று 111.01 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 114.04 அடியாக உயர்ந்துள்ளது.
நீர்வரத்து...
மேலும், அணைக்கு வரும் நீர்வரத்து 1,535 கன அடியில் இருந்து 6,649 கன அடியாக உயர்ந்துள்ளதால், தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப் பட்டுள்ளது. இது 250 கன அடியில் இருந்து 500 கன அடியாக உயர்ந்துள்ளது.
மழையளவு...
நேற்று மட்டும் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் 28 மி.மீட்டரும், தேக்கடியில் 51.4 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.