வேகமாக குறைகிறது பாபநாசம்-மணிமுத்தாறு அணைகள் நீர்மட்டம்.. குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைவதால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
நெல்லை: பருவ மழை ஏமாற்றியதன் காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கலை பொறுத்தவரை குடிநீர், விவசாய பணிகளுக்கு பாபநாசம், மணிமுத்தாறு அணைகளை நம்பியே உள்ளது. இந்த அணைகளின் மூலம் நெல்லை. தூத்துக்குடி மட்டுமல்லாது, விருதுநகர் பகுதிக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
பாபநாசம் அணையின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 107 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூன் மாதம் தென் மேற்கு பருவமழையும், அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழையும் பெய்யும்.
தென் மேற்கு பருவமழை காலத்தில் போதிய மழையை எதிர்பார்க்க முடியாது. ஆனால் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர். நவம்பர், டிசம்பர் காலத்தில் கனமழை பெய்யும். இதன் மூலம் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி விடும். கடந்த ஆண்டு வடிகிழக்கு பருவமழை காலத்தில் இரண்டு அணைகளும் நிரம்பி வழிந்தன.
ஆனால் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை காலம் முழுவதும் வறட்சி காரணமாக ஏமாற்றம் அளித்தது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் கடந்த செப்டம்பர் மாதம் வறண்டன. மணிமுத்தாறு அணையின் கையிருப்பு நீரை வைத்தே குடிநீர் தேவையை பூர்த்தி செய்து சமாளித்தனர்.
அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை கிடைத்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றிவிட்டது. இந்த பருவ மழை காலத்தில் அணையின் நீர்மட்டம் 20 அடி வரை மட்டுமே உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணையில் அதுவும் இல்லை. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 33 அடியாக உள்ளது. மணிமுத்தாறின் நீர்மட்டம் 57.12 அடியாக உள்ளது. அணையின் தற்போதைய நீர் இருப்பை வைத்து குடிநீர் தேவையை ஒரு மாதம் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என்பதால் அதிகாரிகள் திகைத்து போய் உள்ளனர்.