வேலை நிறுத்தம் எதிரொலி- குடிநீர் கேன் விலை ரூ.100 உயரும் அபாயம்!
சென்னை: குடிநீர் நிறுவனங்களின் வேலை நிறுத்தம் தொடர்வதால் கேன் தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் விலையும் 100 ரூபாய்க்கு மேல் உயரும் அபாயமும் உருவாகியுள்ளது.
தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் அடைக்கப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. அதில், குடிநீர் நிறுவனங்கள் அமைக்க அனுமதி பெற வேண்டி, கேன் நிறுவனங்கள் தாக்கல் செய்த விண்ணப்பங்கள் தொடர்பாக தமிழக அரசின் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
தமிழகத்தில் 857 நிறுவனங்கள் குடிநீர் தயாரிக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும், தண்ணீர் எடுக்க தடைவிதிக்கப்பட்ட பகுதிகளில் அனுமதி கேட்டல் உள்ளிட்ட காரணங்களுக்காக 252 நிறுவனங்களின் விண்ணப்பங்களை ஏற்க முடியாது எனவும் பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
வேலை நிறுத்தம்
இதனைத் கேட்ட பசுமைத் தீர்ப்பாயம், அனுமதி கோரி விண்ணப்பித்த 252 கேன் குடிநீர் நிறுவனங்களுக்கு தற்காலிக தடை விதித்தது. இந்நிலையில், குடிநீர் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை விலக்கக்கோரியும், விதிகளை தளர்த்த வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் 850க்கும் மேற்பட்ட கேன் குடிநீர் நிறுவனங்கள் நேற்று மாலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனால் கடந்த மே மாதம் நடைபெற்ற வேலைநிறுத்தத்தின் போது ஒரு கேன் 100 ரூபாய் அளவிற்கு விற்பனையானது போன்ற நிலை ஏற்படக் கூடும் என அஞ்சப்படுகிறது.