பொங்கி வரும் காவிரி.. மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு.. ஆடிப் பெருக்கு விசேஷத்திற்காக
திருச்சி: ஆடிப் பெருக்கு தினம் வருவதால் மக்கள் வசதிக்காக மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 6000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரிக் கரையோர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆடிப் பெருக்கு பண்டிகை ஆகஸ்ட் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கைகள் குவிந்தன.

இதையடுத்து இன்று காலை முதல் மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆடி மாதம் 18ம் தேதியான ஆடிப்பெருக்கு பண்டிகை தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக காவிரிக் கரையோர நகரங்களில் வசிக்கும் மக்கள், ஆடிப்பெருக்கு அன்று ஆற்றில் நீராடி காவிரி தாயை வணங்குவார்கள். வழக்கமாக ஆடி மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு காவிரியில் தண்ணீர் கரைபுரண்டோடும். ஆனால் இந்த ஆண்டு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் காவிரி வறண்டு போய் உள்ளது.
அணையின் நீர் மட்டம் 90 அடியை தாண்டியும் பாசனத்திற்கு நீர் திறக்கப்படாத நிலையில், ஆடிப்பெருக்கையொட்டி முதல்வர் ஜெயலலிதா அணையைத் திறக்க உத்தரவிட்டார். காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆகஸ்ட் 3ம் தேதி வரை தண்ணீர் திறக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications