கடும் குடிநீர் பஞ்சம்- வாக்களிக்க புறப்பட்ட மக்களை குடத்துடன் ஓட வைத்த பேரூராட்சி
ஈரோடு: காலையிலேயே பேரூராட்சி குழாயில் குடிநீர் விட்டதால் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது.
இப்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலில் இருந்து தப்பிக்க, காலை 7 மணிக்கெல்லாம் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கவே மக்கள் விரும்பினர். ஆனால் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் காலை 6.30 மணிக்கு பேரூராட்சி குழாய் குடிநீரை திறந்துள்ளது.
வாக்களிக்க செல்ல வேண்டிய மக்கள், குடிநீரை பிடிப்பதில் கவனம் செலுத்தியதால் காலையில் வாக்குப்பதிவு சற்று மந்தமாக தொடங்கியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
8.30 மணிக்கு பிறகு குடிநீர் சப்ளை நின்றபிறகு வாக்குப்பதிவுக்கு கூட்டம் அதிகமானதாக கூறப்படுகிறது.
வாக்குப்பதிவு தினத்தன்றாவது தண்ணீரை மதியம் விட்டிருக்க கூடாதா என்று பொதுமக்கள் குறைபட்டுக்கொண்டனர்.
வெயில் காரணமாக காலை அல்லது மாலை வேளைகளில் வாக்களிக்கவே மக்கள் அதிகம் விரும்புவது அனைத்து மாநிலங்களிலும் நடந்த தேர்தல்களில் கிடைத்த புள்ளி விவரம் மூலம் தெரியவருகிறது.
தமிழகம் முழுவதுமே கடும் குடிநீர் பஞ்சம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.