நான் ஒடிந்து விழுந்த கிளையல்ல... சக்தி வாய்ந்த விதை... ஆலமரம் ஆவேன்: ப.சி. பேச்சுக்கு வாசன் பதிலடி
சென்னை: ‘நான் ஒடிந்து விழுந்த மரக்கிளை அல்ல. சக்தி வாய்ந்த விதையாக விதைக்கப்பட்டிருக்கிறேன். அது முளைத்து, வளர்ந்து பலமிக்க ஆலமரமாகத் திகழும்' என்று ப.சிதம்பரம் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஜி,கே,வாசன்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தனிக் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். அது தொடர்பாக தனது தொண்டர்களுடன் அவர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் நேற்று, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஜி.கே.வாசன் பின்னர் செய்தியாளர்களிடன் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது :-
கிளையல்ல... நான் விதை
கேள்வி: ப.சிதம்பரம் நேற்று பேசும்போது உங்களை மரத்திலிருந்து ஒடிந்து விழுந்த மரக்கிளை என்று தாக்கி பேசியுள்ளாரே.
பதில்: நான் ஒடிந்து விழுந்த மரக்கிளை அல்ல. சக்தி வாய்ந்த விதையாக விதைக்கப்பட்டிருக்கிறேன். அது முளைத்து, வளர்ந்து பலமிக்க ஆலமரமாகத் திகழும். இதை காலப்போக்கில் அவர் தெரிந்துக்கொள்வார்.
ஆலமரம் ஆவோம்...
தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை எங்கள் கட்சி பூர்த்தி செய்யும். ஆலமரமாக வளரப்போகிற எங்கள் கட்சியில் புதிய கிளைகள் தோன்றி அது பலமாகத் திகழும். நான் மற்றவர்களுடைய விமர்சனங்களை கேட்டு அதை எனக்கு பலமானதாக ஆக்கிக்கொள்வேன்.
மகத்தான மக்கள் கட்சி...
கேள்வி: மூப்பனார் தனிக்கட்சி தொடங்கியபோது இருந்த அரசியல் நிலைமை வேறு. இப்போதுள்ள அரசியல் நிலைமை வேறு என்கிறார்களே.
பதில்: எங்கள் புதிய கட்சி மகத்தான மக்கள் சக்தியாக உருவாகியுள்ளது. அதை நான் முழுமையாக பயன்படுத்தி மக்களுக்காக பாடுபடுவேன் என்றார்.
திருச்சி பொதுக்கூட்டம்...
தனது கட்சிக்கான பெயர், சின்னம் மற்றும் கொடி உள்ளிட்ட விவரங்களை திருச்சி பொதுக்கூட்டத்தில் ஜி.கே.வாசன் அறிவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.