சொந்த செலவில் தான் ரிசார்ட்டில் தங்கியுள்ளோம்... சொல்றது தஞ்சாவூர் எம்எல்ஏ ரங்கசாமி
சொந்த செலவில் தான் ரிசார்ட்டில் தங்கியுள்ளோம் என தஞ்சாவூர் எம்எல்ஏ ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: கூவத்தூரில் சொந்த விருப்பத்தில்தான் தங்கியிருப்பதாக சசிகலா ஆதரவு எம்எல்ஏ ரங்கசாமி தெரிவித்துள்ளார். தங்களின் சொந்த செலவில்தான் கூவத்தூரில் தங்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த கூவத்தூரில் எம்எல்ஏக்களை கடத்தி வைத்திருப்பதாக அங்கிருந்து மாறுவேடத்தில் தப்பி வந்த எம்எல்ஏ சரவணன் கூறினார். இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
இதையடுத்து ரிசார்ட்டில் அதிரடியாக காவல்துறையினர் நுழைந்தனர். சசிகலா சிறை தண்டனையை அனுபவிக்க பெங்களூரு சென்றுள்ளதால் அங்கிருந்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எம்எல்ஏக்களிடம் அவர்கள் விசாரணை நடத்தினர்.
எம்எல்ஏக்கள் வெளியேற வேண்டும் என்றும் போலீசார் கெடு விதித்தனர். இந்நிலையில் ரிசார்ட்டில் உள்ள திவாகரன் அங்குள்ள எம்எல்ஏக்களை ஒவ்வொருவராக அனுப்பி செய்தியாளர்களிடம் குற்றச்சாட்டுகளை மறுத்து பேசுமாறு அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தஞ்சாவூர் எம்எல்ஏ ரங்கசாமி நாங்கள் சொந்த விருப்பத்தில் சொந்த செலவில்தான் ரிசார்ட்டில் தங்கியுள்ளோம். எங்களை யாரும் அடைத்தும் வைக்கவில்லை எங்களுக்கு யாரும் செலவும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
தஞ்சாவூர் எம்எல்ஏவான ரங்கசாமி சசிகலா குடும்ப உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.