நடிகர் சங்க தேர்தல் பணிகள் நிறுத்தம்... மேல்முறையீடு செய்ய சரத்குமார் முடிவு!
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதால், தேர்தல் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானதும், சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சரத்குமார், "நடிகர் சங்க தேர்தல் இதுவரை நியாயமாக நடைபெற்று வந்துள்ளது. விரைவில் நடைபெற இருந்த தேர்தலுக்கான பணிகளும் சீராகவே நடைபெற்று வந்துள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது.
இடைக்காலத் தடையை எதிர்த்து, வரும் திங்கட் கிழமை நடிகர் சங்கம் சார்பில், மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக சரத்குமார் கூறியுள்ளார்.
நடிகர் சங்க தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள செல்வராஜ் கூறுகையில், "இதுவரை 11 பேர் வேட்பு மனுக்கள் வாங்கிச் சென்றனர். நீதிமன்ற தடை உத்தரவு வந்த பிறகு பணி நிறுத்தப்பட்டது," என்றார்.